கங்குலி திட்டம்
2020 ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றின் போதே கங்குலி அடுத்த ஐபிஎல் சீசனுக்கான வேலையை துவங்கி விட்டார். அப்போதே 2021 ஐபிஎல் தொடரை பிரம்மாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டார். அதன் படி புதிய ஐபிஎல் அணிகளை அறிமுகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
தொலைநோக்கு திட்டம்
இது ஒரு தொலைநோக்கு திட்டமாக கருதப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடர் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை ஈர்த்து சாதனை செய்த போதும் பிசிசிஐக்கு அதில் அதிக லாபம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் தற்போது தவறவிட்ட லாபத்தை சேர்த்து அடுத்த இரு ஆண்டுகளில் அள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு அணி
புதிதாக இரண்டு ஐபிஎல் அணிகளை அறிமுகம் செய்வதே அந்த திட்டம். அடுத்த இரு சீசன்களிலும் ஒரு புதிய ஐபிஎல் அணியை அறிமுகம் செய்து ஐபிஎல் தொடரை பிரம்மாண்டமாக மாற்ற இருந்தார். அதன் மூலம், அடுத்த ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தத்தை இப்போது இருப்பதை விட பெரிய தொகைக்கு விற்க முடியும்.
மெகா ஏலம்
ஆனால், இதில் ஒரு சிக்கல் இருந்தது. ஒவ்வொரு ஐபிஎல் அணியை அறிமுகம் செய்யும் போதும் வீரர்களுக்கான மெகா ஏலம் நடத்தப்பட வேண்டும். அப்போது அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை நீக்கி விட்டு மீண்டும் ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.
ஒப்புக் கொள்ளாத அணிகள்
இப்படி செய்தால் ஐபிஎல் அணிகள் ஒரு குழுவாக வீரர்களை தக்க வைத்து, அவர்களை பட்டை தீட்ட முடியாமல் போய் விடும். மெகா ஏலத்தில் புதிய அணிகள் சரியாக அமையாமல் போனால் தோல்வி அடைய நேரிடும் என்பதால் இரண்டு ஆண்டுகளில் இரண்டு மெகா ஏலத்தை நடத்த ஒப்புக் கொள்ள மறுத்துள்ளன.
ஒரே ஆண்டில்..
இந்த முடிவால் பிசிசிஐ ஒரே ஆண்டில் இரண்டு ஐபிஎல் அணிகளை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதன் மூலம், 2021 ஐபிஎல் தொடருக்கு முன்பு மட்டும் மெகா ஏலம் நடத்தினால் போதும் என்ற நிலை உருவாகும்.
சிக்கல்
தற்போது எட்டு அணிகள் இரண்டு முறை மற்ற அணிகளை சந்திக்கும் லீக் சுற்று முறை அமலில் உள்ளது. அதை அப்படியே தொடர்ந்தால் 10 அணிகள் தங்களுக்குள் இரண்டு முறை மோதிக் கொண்டால் அதிக லீக் போட்டிகளை நடத்த வேண்டும்.அது சாத்தியமில்லை என்பதால் பிசிசிஐ சிக்கலில் உள்ளது.
என்ன திட்டம்?
இன்னும் இரண்டு மாதங்களில் மெகா ஏலத்தை நடத்த வேண்டும். அதற்குள் லீக் சுற்றை குறுகிய காலத்துக்குள் மாற்றி அமைத்து திட்டமிட வேண்டும். 2011இல் பத்து ஐபிஎல் அணிகள் ஆடிய போது ஐந்து, ஐந்து அணிகளாக இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றுப் போட்டி நடந்தது.
குழப்பம்
அதே போல, 2021 ஐபிஎல் தொடரையும் நடத்த பிசிசிஐ முயற்சி செய்யக் கூடும். ஆனால், தற்போது உள்ளது போல ஒவ்வொரு அணியும் 14 லீக் சுற்றுப் போட்டிகளுக்கு குறையாமல் ஆடினால் தான் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை அதிக விலைக்கு விற்க முடியும். அதனால், பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது.