நல்ல ஆண்டு
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் தலைமையில் செயல்பட்டு வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இதனால் இந்த சீசனில் கப்பை அடித்தே தீர வேண்டும் என்று எதிரணிகளை பந்தாடி வந்தது. மொத்தம் 7 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 5 ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ம் இடம் வகிக்கிறது.
வருத்தம்
பேட்டிங்கில் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் எனவும் பவுலிங்கில் ஹர்ஷல் படேல் என ஃபுல் ஃபார்மில் இருந்தனர். ஆனால் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது அந்த அணிக்கு பெரும் இடியாக அமைந்தது. 'ஈ சால கப் நம்தே' என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போன்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இர்ஃபான் கருத்து
இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல் தொடர் பாதிக்கப்பட்டதில் ஆர்சிபி அணிக்குதான் மிகுந்த வருத்தம் இருக்கும். அந்த அணி சிறப்பாக ஆடி வந்தது. டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் ஃபார்மில் இருந்தனர். குறிப்பாக ஈ சாலே கப் நம்தே என கூறிவந்த ரசிகர்கள் ரொம்ப பாவம். வருத்தமாக இருப்பார்கள். இந்தாண்டு கோப்பையை வெல்ல போகும் அணியாகவும் ஆர்சிபி பார்க்கப்பட்டது. எனினும் அவர்களுக்கு ஒரு நல்ல ஆண்டாக இருந்தது.
ஆர்சிபி சாமார்த்தியம்
இந்தாண்டு ஏலம் முதலே அவர்கள் கடுமையாக உழைத்தனர். மேக்ஸ்வெல்லை சரியாக தேர்வு செய்து எடுத்தனர். குறிப்பாக ஹர்ஷல் படேல் இருக்கும் போது டேனியல் சாம்ஸ்-ஐயும் எடுத்தது சாமர்த்தியமான முடிவு. ஒரு வேளை போட்டி பெங்களுரூவில் நடைபெற்றால் டேனியல் சாம்ஸ் உதவியாக இருப்பார் என சிந்தித்துள்ளனர். ஆனால் அது நடைபெறாததால் ஹர்ஷல் படேலே அனைத்து பணிகளையும் செய்துவிட்டார்.