கட்டாய வெற்றி
இப்போட்டியில் 200+ ரன்களுக்கு மேல் அடித்து அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது. எனவே அதற்கு ஏற்றார் போலவே இன்று தொடக்கத்தை கொடுத்தது மும்பை அணி . தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் பவுண்டரி மழை பொழிந்தனர். குறிப்பாக ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சர்வ நாசம் செய்தார் இஷான் கிஷான். இதனால் மும்பை அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது.
மின்னல் அரைசதம்
தொடக்க வீரர் ரோகித் சர்மா 18 ரன்களுக்கு வெளியேறினார். ஐதராபாத் அணியை மிரட்டி வந்த இஷான் கிஷான் 16 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் மூலம் மும்பை அணியில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். மொத்தமாக 32 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என 84 ரன்களை குவித்து அவுட்டானார்.
சரிந்த மிடில் ஆர்டர்
இதன் பிறகு வந்த ஹர்திக் பாண்ட்யா (10), கெயீரன் பொல்லார்ட் (13), நீஷம் (0), க்ருணால் பாண்ட்யா (9) கோல்டர் நைல் (3) என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால் மறுமுணையில் தூண் போன்று நிலைத்து நின்று விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஒற்றையாளாக ஐதராபாத் அணியை மிரட்டினார். இதன் மூலம் 24 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் அரைசதம் கடந்தார்.
சூர்யகுமாரின் அதிரடி
ஒருபுறம் மும்பை அணியின் விக்கெட்கள் சரிய, மறுமுணையில் நின்றிருந்த சுர்யகுமார் யாதவ் அனைத்து திசைகளிலும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசினார். 40 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் யாதவ் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 82 ரன்களை விளாசி அவுட்டானார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 235 ரன்களை குவித்தது. ஐதராபாத் அணியை 65 ரன்களுக்குள் சுருட்டினால் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம்.