கட்டாய வெற்றி
இப்போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிக முக்கிய போட்டியாகும். ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்காக கேகேஅர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எனவே இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும். பின்னர் ஐதராபாத் அணியை 170 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் அப்படி வீழ்த்தினால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடலாம்.
மிரட்டல் தொடக்கம்
எனவே அதற்கு ஏற்றார் போலவே இன்று தொடக்கத்தை கொடுத்தது மும்பை அணி . தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் பவுண்டரி மழை பொழிந்தனர். ஆட்டத்தின் முதல் ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்க விட்ட இஷான் கிஷான், சித்தார்த் கவுல் வீசிய 2வது ஓவரில் 4 பவுண்டரிகளை அடுத்தடுத்து விளாசி ஆச்சரியம் கொடுத்தார்.
மின்னல் அரைசதம்
மறுமுணையில் ஆரம்பத்தில் நிதானம் காட்டி வந்த ரோகித் சர்மாவும், திடீரென் அதிரடி காட்டியதால் மும்பை அணியின் ஸ்கோர் மலமலவென உயர்ந்தது. ஐதராபாத் அணியை மிரட்டி வந்த இஷான் கிஷான் 16 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களும் அடங்கும். அவரின் வேகத்தை தடுத்து நிறுத்த முடியாமல் ஐதராபாத் வீரர்கள் திணறி வருகின்றனர்.
200 கன்பார்ம்
ஆரம்பம் முதலே ரன் மழை பொழிந்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்களை விளாசி அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பின் வரிசையில் இன்னும் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இருப்பதால் மும்பை அணியின் ஸ்கோர் நிச்சயம் 200 ரன்களுக்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.