ஐபிஎல் தொடர்
ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த 2 நாட்களில் டி20 உலகக்கோப்பை தொடர் வருவதால், அயல்நாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் நீடித்து வந்தது. பல்வேறு அயல்நாட்டு வீரர்களும் ஐபிஎல் தொடரின் 2வது பாதியில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துவிட்டனர். இதனையடுத்து நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்து அணிகள் களமிறங்க தயாராக உள்ளது.
இங்கிலாந்து வீரர்கள் விலகல்
இந்நிலையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த நட்சத்திர வீரர்களான பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன் மற்றும அல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், ஆகிய மூவரும் ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து வீரர்களின் ஒப்பந்தங்களையும் முடித்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டிருந்த அணி நிர்வாகங்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
காரணம் என்ன
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியில் கொரோனா வைரஸ் நுழைந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்திய வீரர்கள் பயோ பபுள் விதிமுறைகளை மதிக்காமல் வெளியில் சுற்றி வந்ததாகவும், அனுமதி பெறாமல் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டனர் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே இந்திய அணியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்கப்போவதில்லை என அவர்கள் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
பெரும் பின்னடைவு
ஐபிஎல் தொடரில் ஜானி பேர்ஸ்டோ சன் ரைசர்ஸ் ஐதாரபாத் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார். அதே போல கிறிஸ் வோக்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும், டேவிட் மாலன் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் முக்கிய வீரர்களாக இருந்து வருகின்றனர். இவர்களின் விலகல் அந்த அணிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.