ஐபிஎல் முதல்போட்டி
ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை அணிகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. இந்த அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இந்தியா - பாகிஸ்தான் மோதுவது போல விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர் இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வந்த சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக இருந்தது டூப்ளசிஸின் காயம் தான்.
ரசிகர்கள் ஏமாற்றம்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்றிருந்த டூப்ளசிஸ், காயத்தினால் பாதிக்கப்பட்டார். இதனால் அமீரகத்திற்கு வந்த போதும், அவர் தீவிர சிகிச்சையை பெற்று வந்தார். எனவே அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெற மாட்டார் என தகவல்கள் வெளியாகின. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.
காசி விஸ்வநாதன் விளக்கம்
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டூப்ளசிஸ் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவர் காயத்தில் இருந்து பூரண குணமடைந்து தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், எங்கள் அணியில் அனைத்து வீரர்களும் தயாராக உள்ளனர். டூப்ளசிஸ் ஃபிட்னஸ் சோதனையில் தேர்ச்சி பெற்றுவிட்டார். அவர் ப்ளேயிங் 11 தேர்வுக்காக தயாராகி வருகிறார் எனக்கூறியுள்ளார்.
ரசிகர்களிடையே குழப்பம்
டூப்ளசிஸ் காயத்தில் இருந்து மீண்டிருந்தாலும், அவர் தனது வழக்கமான ஃபார்மில் இருப்பாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அவரின் விவகாரத்தில் தோனி ரிஸ்க் எடுக்க மாட்டார் என்று முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். எனவே டூப்ளசிஸ் களமிறங்குவாரா அல்லது அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிஎஸ்கே ப்ளேயிங் 11
ருத்ராஜ் கெயிக்வாட், ராபின் உத்தப்பா / டூப்ளசிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், லுங்கி நெகிடி, ஹாசல்வுட்