கடின இலக்கு
ஐபிஎல் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீட்டிங்கை தேர்வு செய்திருந்தார். தொடர்ந்து பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது.
அசத்தல் பேட்டிங்
பஞ்சாப் அணியின் சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 14 (9) ரன்னில் வெளியேற, மறுபுறம் அணியின் கேப்டன் 50 பந்துகளில் 91 ரன்களை விளாசினார். அவருடன் சேர்ந்து ஆடிய கிறிஸ் கெய்ல் 28 பந்துகளில் 40 ரன்களும், தீபக் ஹூடா 64 ரன்களும் விளாசினர்.
அச்சுறுத்தல்
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஸ்டோக்ஸ்(0), மன்னன் வோஹ்ரா (12) ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவருக்கு சக வீரர்கள் உதவாமல் அடுத்தடுத்து வெளியேறியதால் ஒற்றை ஆளாக போராடி 63 பந்துகளில் 119 ரன்களை விளாசினார்.
பரபரப்பு
கடைசி ஓவரின் கடைசி பந்தில் ராஜஸ்தான் அணி 5 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. சஞ்சு சாம்சன் யாரும் வியக்கும் வகையில் அசுர பலத்தில் பேட்டிங் செய்துகொண்டிருந்ததால், அனைவருக்கும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அர்ஷ்தீப் சிங்கின் அபார பந்துவீச்சால் கடைசி பந்தில் சாம்சன் கேட்ச் ஆகி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது.
கடைசி நொடி
இதுகுறித்து பேசியுள்ள பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல், எனக்கு இதய துடிப்பு மிக அதிகமானது, ஆனால் நம்பிக்கையை மட்டும் நான் கைவிடவில்லை. 2 விக்கெட்கள் பஞ்சாப் அணியை மீட்டது. பந்துவீச்சாளர்கள் நாங்கள் திட்டமிட்டபடியே செயல்பட்டனர். முதல் 10 - 11 ஓவர்கள் சிறப்பாக அமைந்தது. சில தவறுகளை செய்தோம். இது இளம் வீரர்கள் அதிகம் இருக்கும் அணி. எனவே புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு மீள்வார்கள் என தெரிவித்தார்.
ராகுல் பாராட்டு
பேட்டிங்கை பொறுத்தவரை தீபக் ஹூடா சிறப்பாக இருந்தார். அது போன்ற ஆட்டத்தையே அணியில் எதிர்பார்க்கிறோம். அச்சமின்றி பந்துகளை சந்தித்து பவுலர்களுக்கு தொல்லை தரவேண்டும். அதே போல பவுலர் அர்ஷ்தீப் சிங் கடந்தாண்டை போலவே கடைசி ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டார். அவர் பிர்ஷர் பற்றி எல்லாம் யோசிக்காமல் அவருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை நேசித்து செய்கிறார். என பாராட்டினார்.