18ம் தேதி ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் 2021 தொடருக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. வரும் 18ம் தேதி ஐபிஎல் ஏலம் சிறிய அளவில் சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக 8 ஐபிஎல் அணிகளும் தயாராகி வருகின்றன. தங்களிடம் இருந்த சில வீரர்களை விடுவித்தும் சில வீரர்களை தக்கவைத்தும் கடந்த வாரத்தில் அணிகள் அறிவிப்பு வெளியிட்டன.
அருண் சிங் நம்பிக்கை
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐபிஎல் நிர்வாகக்குழு உறுப்பினர் அருண் சிங் துமால் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை போல அல்லாமல் இந்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் கண்டிப்பாக நடக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நிர்வாக குழு இறுதி முடிவு
அதேபோல இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வழக்கம்போல ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படவுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 11ம் தேதி இந்த தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் நிர்வாகக்குழு கூடி இறுதி முடிவை எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிசிசிஐ அறிவிப்பு
இந்தியாவின் லீக் தொடரான ஐபிஎல்லை இந்தியாவில் நடத்துவதே சிறப்பானதாக இருக்கும் என்று பிசிசிஐ தரப்பில் முன்னதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா சூழ்நிலையில் கடந்த முறை யூஏஇயில் நடத்தப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதேபோல, இந்த சூழலில் ஐபிஎல்லை பாதுகாப்பாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.