தோனி
சென்னை அணிக்கு கடந்த 2008ம் ஆண்டு முதல் எம்.எஸ்.தோனி செயல்பட்டு வருகிறார். இதுவரை 200 போட்டிகளில் அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் 110 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பைகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
ஓய்வு எப்போது?
கடந்தாண்டு சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஐபிஎல் போட்டிகளிலும் பேட்டிங்கில் திணறி வருகிறார். இதனால் அவர் இந்தாண்டு ஓய்வு அறிவிப்பார் என கூறப்பட்டது. ஆனால் சென்னை அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அதற்கு மறுப்பு தெரிவித்து, தோனி தொடர்ந்து விளையாடுவார் என தெரிவித்தார். இந்நிலையில் தோனியின் ஓய்வுக்கு பிறகு ஜடேஜாவை மையப்படுத்தி அணியை உருவாக்க வேண்டும் என வாகன் தெரிவித்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா
இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் வாகன், தோனி இன்னும் 2 - 3 ஆண்டுகள் விளையாடுவார் என நீங்கள் சொல்லலாம், ஆனால் உண்மையை பார்த்தால் அப்படி இல்லை. எனவே புதிய தலைமையின் கீழ் அணியை உருவாக்க வேண்டும். அதன்படி ஜடேஜாவின் தலைமையில் அணியை அமைத்தால் சிறப்பாக இருக்கும். அவர் பேட்டிங், பவுலிங், ஆட்டத்தின் மனநிலை மிக நன்றாக உள்ளது.
சிறந்த வீரர்
ஜடேஜாவிடம் நீங்கள் 4 - 5வது வீரராக இறங்க சொல்லலாம், அல்லது முன்கூட்டியே இறங்க சொல்லலாம், அவரிடம் தொடக்கத்திலேயே பவுலிங் வீசவும் சொல்லலாம், முக்கிய இடங்களில் ஃபீல்டிங்கிற்கு பயன்படுத்தலாம். அவர் அனைத்திற்கு தயாராக இருப்பார். என்னை பொறுத்தவரை அவர் சிறந்த வீரர் என்று நினைக்கிறேன்.
இளம் வீரர்
சென்னை அணி சாம் கரண் தலைமையில் அணியை அமைப்பதற்கு முயற்சிப்பதாக தெரிகிறது. ஆனால் அவர் மிகவும் இளம் வீரர். அவர் பெரியளவிலான பிரஷரை கையாள்வதற்கு தயாராகவில்லை. அவர் ஒரு தலைமைக்கு கீழ் விளையாடும் போது தான் சிறப்பாக இருப்பார் என்று தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.