கொரோனா உறுதி
நடப்பு தொடரில் மிகவும் சிறப்பான ஃபார்மில் இருந்த சென்னை அணியில் முதலில் பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவருக்கு உறுதியான உடனேயே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு 2 முறை டெஸ்ட் எடுத்து பார்த்தபோதும் பாசிட்டீவ் என வந்துள்ளது.
குவாரண்டைன்
இதனையடுத்து இவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிஎஸ்கே அணி நிர்வாக இவர்களை கண்காணித்து வருகிறது. குறிப்பாக ஆஸி, முன்னாள் வீரர் மைக் ஹசியின் உடல்நலம் குறித்து தகவல் வெளியிட்ட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அவர் சிஎஸ்கேவின் கண்காணிப்பில் நலமுடன் உள்ளார் என தெரிவித்தது.
திடீர் முடிவு
இந்நிலையில் கொரோனா பாதித்த மைக் ஹசி மற்றும் பாலாஜியை சென்னைக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சிஎஸ்கே நிர்வாக ஏர் ஆம்புலன்ஸ் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது. அந்த அணிக்கு சென்னையில் சிறந்த மருத்துவர்களை தெரியும் என்பதால் அவர்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பயணம்
விமான பயணத்தால் கொரோனா பரவல் அபாயம் இருக்கும் எனக்கூறப்படும் நிலையில் ஹோட்டல் அறைகளில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வருவது சரியான முடிவு இல்லை என ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அடுத்த 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் எடுக்கப்படும் பரிசோதனையில் 2 முறை நெகட்டீவ் என வந்தால் தான் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
வீரர்கள் காத்திருப்பு
இந்திய விமானங்களுக்கு ஆஸ்திரேலியாவில் மே 15ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் நாளை இந்தியாவில் இருந்து கிளம்பி மாலத்தீவுக்கு செல்லவுள்ளனர். அங்கு மே 15 வரை காத்திருந்துவிட்டு அதன் பின்னர் தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்படவுள்ளனர். மைக் ஹசியும் அவர்களுடன் செல்வாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.