சிஎஸ்கே உதவி
இதற்கு முன்னர் ஐபிஎல் அணிகள் தன்னார்வ அமைப்புக்கும், மத்திய அரசிடமும் நிதியுதவி கொடுத்து வந்தனர். ஆனால் சிஎஸ்கே அணி, தமிழகத்திற்கு 450 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்துள்ளது. அந்த சிலிண்டர்களை தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் ரகு குருநாத் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
இன்னும் உள்ளது
முதல்கட்டமாக சில ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மட்டும் தற்போது வழங்கியிருப்பதாகவும், ஒரு வாரத்திற்குள் முழுமையாக வழங்கப்படும் எனவும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பூமிகா என்ற தன்னார்வ அமைப்பு சிஎஸ்கேவுக்கு செய்து வருகிறது.
உருக்கம்
இதுகுறித்த அந்த அணியின் ட்விட்டர் பதிவில், மக்கள் மாஸ்க் போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக 'மாஸ்க் போடு விசில் போடு' என்ற விழிப்புணர்வு வாசகத்தை குறிப்பிட்டுள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இதயத் துடிப்பாக சென்னை மக்கள் உள்ளனர். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை விரட்டுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19
ஐபிஎல்-ல் சிறப்பாக ஆடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பயிற்சியாளர்கள் மைக் ஹசி மற்றும் லட்சுமிபதி பாலாஜி ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சிகிச்சை பெற்று வரும் இவர்களில் மைக் ஹசிக்கு மட்டும் கொரோனா நெகடிவ் என வந்துள்ளது. எனினும் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.