வெற்றி கட்டாயம்
5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சற்று சறுக்கலை எதிர்கொண்டு வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்புக்காக போராடி வருகிறது. கடைசியாக நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கூட மும்பை அணி பேட்டிங்கில் சொதப்பி தோல்வியடைந்தது. எனவே கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
ரோகித் சர்மா பேச்சு
இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட வீடியோவில், கொல்கத்தா அணி சிறந்த போட்டியாளர்கள். அவர்கள் சமீபத்தில் நல்ல ஃபார்மில் உள்ளனர். கடைசியாக விளையாடிய போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றுள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கும். எனவே அவர்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதானதாக இருக்காது.
புள்ளிவிவரம்
உண்மையை கூற வேண்டு என்றால், டி20 போட்டிகளில் கடந்த கால புள்ளிவிவரங்களை நான் சுத்தமாக நம்பமாட்டேன். ஏனென்றால் டி20 போட்டியானது அன்றைய தினம் எப்படி விளையாடுகிறோமோ, அதனை வைத்து தான் உள்ளது. அந்த தினத்தில் முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டும். கொல்கத்தா அணிக்கு நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம். ஆனால் இன்றைய தினத்தில் செயல்படுவதே எங்களுக்கு முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பங்கேற்காததே மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர்கள் தற்போது முழு உடற்தகுதியுடன் இருப்பதால் கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் நிச்சயம் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.