ஹிட் மேன் ரோகித்
தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி செயல்பட்டு வரும் போதிலும், மும்பை அணிதான் அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. இதற்கு காரணம் ரோகித் சர்மாவின் கேப்டன்சி தான். குறிப்பாக கடைசி ஒரு ரன்னில் கூட சிஎஸ்கே அணியை வீழ்த்தி மும்பை அசத்தியுள்ளது. ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் ஒரு பேட்ஸ்மேனாக சாதனை படைக்கவுள்ளார்.
புதிய சாதனை
அதாவது டி20 போட்டிகளில் 400 சிக்ஸர்களை அடிக்கப்போகும் முதல் இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைக்க இன்று வாய்ப்புள்ளது. 34 வயதாகும் ரோகித் சர்மா இதுவரை டி20 போட்டிகளில் 397 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இன்று சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் 3 சிக்ஸர்களை விளாசினால் புதிய சாதனையை படைக்கலாம். டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்த 397 சிக்ஸர்களில் 224 சிக்ஸர்கள் ஐபிஎல் தொடரில் அடித்தவையாகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 173 சிக்ஸர்களும், 51 சிக்ஸர்கள் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காகவும் அடித்ததாகும்.
இந்தியர்கள்
இந்திய அணியில் சிக்ஸர் அடிப்பதில் ரோகித்தின் அருகில் கூட எந்த வீரரும் வரவில்லை. அவருக்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா 324 சிக்ஸர்களும், விராட் கோலி 315 சிக்ஸர்களும் அடித்து அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். சிஎஸ்கே கேப்டன் தோனி 303 சிக்ஸர்கள் விளாசி 4வது இடத்தில் உள்ளார்.
வீரர்களின் பட்டியல்
சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 8 வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் கிறிஸ் கெயில் உள்ளார். கெயிரன் பொல்லார்ட், ஆண்ட்ரே ரஸல், மெக்கலம், ஷேன் வாட்சன், டிவில்லியர்ஸ், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்களை விளாசி ரோகித் சர்மா இந்த பட்டியலில் முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.