தொடங்கிய சர்ச்சை
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான சூர்யகுமார் யாதவுக்கு சிறப்பாக ஆடி 57 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் அடித்த பந்தை டேவிட் மாலன் தரையோடு ஒட்டி பிடித்தார். மிகவும் க்ளோஸ் காலாக இருந்த சூழ்நிலையில் களத்தில் இருந்த நடுவர் சூர்யகுமாருக்கு அவுட் கொடுத்துவிட்டு பின்னர் 3வது நடுவருக்கு பரிந்துரைத்தார். வீடியோவில் சரியாக கணிக்க முடியாததால் கள நடுவரின் சாஃப்ட் சிக்னலே கடைசி முடிவு என 3வது நடுவர் தெரிவித்தார். இது சர்ச்சையானது.
ஐபிஎல் தொடர்
நடப்பாண்டுக்கான ஐபிஎல் வரும் ஏப்.9ம் தேதி தொடங்கவுள்ளது. சர்வதேச போட்டியில் நடந்த சாஃப்ட் சிக்னல் பிரச்னை ஐபிஎல் தொடரில் வந்துவிடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு 3வது நடுவருக்கு பரிசீலனைக்கு வரும் முடிவுகளில் கள நடுவர்களின் சாப்ட் சிக்னல் விதிமுறை இருக்காது எந்த முடிவானாலும் 3வது நடுவர்தான் எடுக்க வேண்டும்.
கோலி காட்டம்
இதனிடையே இதுகுறித்து பேசியிருந்த விராட் கோலி, களநடுவர்களின் தவறான முடிவுகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும். சாஃப்ட் சிக்னல் விதியை எளிமையாக்க வேண்டும். மேலும் இதுபோன்ற தவறான முடிவுகளுக்கு தீர்வு காண வேண்டும். ஏனெனில் முக்கியமான போட்டிகளில் இது போன்ற முடிவுகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
வேறு மாற்றங்கள்
மேலும் கள நடுவர்கள் எடுக்கின்ற ஷார்ட் ரன் மற்றும் நோ பால் தொடர்பான முடிவுகளிலும் 3வது நடுவர்கள் குறுக்கிடலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. அதே போல் ஒரு இன்னிங்ஸின் 20வது ஓவர் ஆட்டத்தின் 90 நிமிடங்களுக்குள் வீசியாக வேண்டும். இதற்கு முன்னர் வரை 90வது நிமிடத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ 20வது ஓவரையும் வீசினால் போதும் என இருந்தது. போட்டி நேரத்தை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.