முதல் இன்னிங்ஸ்
இந்த போட்டியில் முதல் பாதி ஆட்டம் ஆர்சிபியின் கையில் தான் இருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி (53) படிக்கல் (70) இருவருமே அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார்கள். இதனால் 13 ஓவர்களில்
110 ரன்கள் சேர்த்தது. இதனால் அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடி காட்டி 190க்கும் அதிகமான ரன்களை சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தோனியின் ப்ளான்
ஆனால் ஆட்டம் தலைகீழாக மாறியது. கடைசி 4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 25 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 156/6 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த திடீர் சரிவுக்கு சிஎஸ்கே பவுலிங்கில் தோனி அடுத்தடுத்து ஏற்படுத்திய மாற்றங்களே ஆகும். பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 157 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.
தோனியின் கவலை
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய தோனி, ஆட்டம் முழுவதும் எனக்கு ஒரே ஒரு கவலை தான் இருந்துக் கொண்டிருந்தது. அதாவது கடந்தாண்டு ஐபிஎல்-ல் சார்ஜா மைதானத்தில் 2வதாக பேட்டிங் செய்த போது பனி கொட்டியிருந்தது. ஆனால் இந்த போட்டியில் நினைத்த அளவுக்கு பனி பொழியாததால் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆர்சிபியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் 8 மற்றும் 9வது ஓவர்களில் பிட்ச் ஸ்லோவாக தொடங்கியது. எனவே ஜடேஜாவை கொண்டு வந்து சிறப்பாக காரியத்தை முடித்தோம்.
பேட்டிங் திட்டம்
அமீரகத்தில் உள்ள 3 மைதானங்களும் மிக வேறுபட்டு இருக்கின்றன. அதில் சார்ஜா மைதானம் தான் மிகவும் ஸ்லோவான பிட்ச். எனவே இங்கு வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன் ஜோடி இருந்தால் தான் நன்றாக இருக்கும். சிஎஸ்கேவில் நிறைய இடது கை வீரர்கள் உள்ளனர். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் இறங்குவார்கள். அதனால் தான் ராயுடுவுக்கு பின்னதாக ரெய்னாவை களமிறக்கினேன். சிஎஸ்கே அணியில் உள்ள அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள். இது கூடுதல் பலமாக உள்ளது என தோனி தெரிவித்துள்ளார்.