அட்டவணை தகவல்
இதுவரை 29 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள சூழலில் மீதம் 31 போட்டிகள் உள்ளன. இவற்றை அமீரகத்தில் உள்ள 3 மைதானங்களில் வரும் செப்.3வது வாரம் முதல் அக்.10ம் தேதி வரை நடத்தி முடிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
வெளிநாட்டு வீரர்கள்
பிசிசிஐ திட்டமிட்டுள்ள இந்த கால இடைவெளியில் அயல்நாட்டு அணிகள் பல்வேறு சர்வதேச தொடர்களை திட்டமிட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் தான் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. எனவே அதற்கு தயாராகும் நோக்கில் சர்வதேச டி20 போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளன. இதனால் அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் எனத்தெரிகிறது. ஏற்கனவே இங்கிலாந்து, வங்கதேச நாடுகள், தங்கள் வீரர்கள் ஐபிஎல்-ல் பங்கேற்க மாட்டார்கள் என தடாலடியாக தெரிவித்துவிட்டன.
பிசிசிஐ மீது நம்பிக்கை
இந்நிலையில் பிசிசிஐ எப்படியும் வீரர்களை வரவழைத்து போட்டிகளை நடத்திவிடும் என்ற நம்பிக்கையில் ஐபிஎல் அணிகள் அமீரகத்தில் ஹோட்டல்களை முன்பதிவு செய்யும் பணிகளில் இறங்கியுள்ளன. குறிப்பாக கடந்தாண்டு ஐபிஎல்-ன் போது தங்கியிருந்த ஹோட்டல்களையே மீண்டும் முன்பதிவு செய்ய பேச்சு வார்த்தைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அதே ஹோட்டல்கள்
இதுகுறித்து அதிகாரி ஒருவர் அளித்துள்ள தகவலில், அயல்நாட்டு வீரர்களின் பங்கேற்பு இருப்பதற்காக பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த பிரச்சினைகள் அனைத்தையும் முடித்தவுடன் கொரோனா விதிமுறைகள், குவாரண்டைன் விவரங்கள் குறித்து பிசிசிஐ அறிவித்தவுடன் ஹோட்டல்கள் புக் செய்யப்பட்டுவிடும். இதற்கான பணிகளில் அணிகள் ஈடுபட்டுள்ளது. கடந்த வருடம் எந்தெந்த ஹோட்டல்களை, அணிகள் எடுத்திருந்தனவோ அதே ஹோட்டல்களில் மீண்டும் தங்க வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார்.