ஐபிஎல் போட்டிகள்
நடப்பு சாம்பியனான மும்பை அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. இந்தியாவில் நடைபெற்ற லீக் போட்டிகளின் முடிவில் மும்பை அணி 4ஆவது இடத்தில் இருந்தது. இந்தியாவில் நடைபெற்ற லீக் போட்டிகளில் 7இல் 4 போட்டிகளில் மும்பை அணி வென்று இருந்தது. ஆனால், ஐக்கிய அமீரகத்தில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. முதலில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் மும்பை வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து 23ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது
மோசமான ஃபார்ம்
மும்பை அணியின் மோசமான ஃபார்ம் நேற்றும் தொடர்ந்தது. நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோல்வி அடைந்தது. 10 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள மும்பை அணி, இதனால் புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து மோசமான தோல்விகளைச் சந்தித்து வரும் மும்பை அணியின் பிளேஆப் கனவு கிட்டதட்ட முடிந்துவிட்டதாகவே அனைவரும் கருதுகின்றனர். ஆனாலும் மும்பை அணியின் ப்ளேஆப் கனவு, இன்னும் முடியவில்லை என்று புது விளக்கத்தைத் தருகின்றனர் மும்பை ரசிகர்கள்.
என்ன வழி
மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆப் அடைய எளிமையான வழி என்றால் அடுத்து வரும் நான்கு போட்டிகளையும் வெல்வது தான். அடுத்து வரும் 4 போட்டிகளிலும் வென்றால், மும்பை அணியின் மொத்த புள்ளிகள் 16 ஆக உயரும். இதன் மூலம் மும்பை அணி எளிதாக நான்காவது இடத்தை பிடிக்க முடியும். மும்பை அணியின் நெட் ரன் ரேட்டும் இப்போது மோசமாக உள்ளதால், 4 போட்டிகளிலும் வெல்வதே மும்பை அணிக்கு பிளேஆப் சுற்றுக்குச் செல்ல எளிமையான வழியாக இருக்கும். ஆனால் இது மட்டும் தான் ஒரே வழி என்று கூற முடியாது. வரும் போட்டிகளில் தோற்றாலும் கூட மும்பை அணி பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்புகள் உள்ளது.
மற்றொரு வழி
அதேநேரம் அடுத்து வரும் 4 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வென்றாலும்கூட மும்பை அணியால் பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும். ஆனால், அப்போது 14 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை அணிக்குச் சாதகமாக மற்ற போட்டிகளின் முடிவுகளும் அமைய வேண்டும். இந்த சூழலில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளின் போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்தே மும்பை அணியால் பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல முடியும். அதிலும் இப்போது 4ஆவது இடத்திற்கு போட்டிப்போடும் 5 அணிகளில் மும்பை அணிக்கே மோசான ரன்ரேட் உள்ளது. கடந்த 2014இல் இதுபோன்ற நிலையில் தான் மும்பை கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி
அதேநேரம் 14 புள்ளிகளுக்குக் கீழ் எடுத்தால் மும்பை அணி ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாத நிலை ஏற்படும். அப்படியொரு நிலை ஏற்பட்டால், மும்பை அணி கடந்த 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு பிளே ஆப் சுற்றில் தகுதி பெற முடியாமல் போனது இதுவே முதல்முறையாக இருக்கும். நடப்பு சாம்பியனான மும்பை அணியின் நிலை தற்போது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. அதேநேரம் ஒருபோதும் நம்மால் குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த காலங்களிலும் தொடக்கத்தில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மும்பை, இறுதியில் கோப்பையையே வென்றுள்ளது.
மற்ற அணிகள்
சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் கிட்டதட்ட ஐபிஎல் பிளே ஆப் சுற்று பெற்றுவிட்டன. கடந்த ஆண்டு மிக மோசமான ஐபிஎல் தொடருக்குப் பிறகு, சிஎஸ்கே மீண்டும் 'பழைய பன்னீர்செல்வமாக' இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வருகிறது. 8 போட்டிகளில் வென்று 16 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சிஎஸ்கே மிக எளிதாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதன் மூலம் 11ஆவது முறையாக பிளேஆப்-க்கு தகுதி பெற்ற ஒரே அணி என்ற சிறப்பை சிஎஸ்கே பெறும். அதேபோல தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெல்லி அணியும் 16 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. இந்த 2 அணிகளும் பிளேஆப் சுற்றுக்குத் தேர்வாவது உறுதி. ஆனால், எந்த இடத்தில் தேர்வாகும் என்பதே தற்போது இருக்கும் ஒரே கேள்வி!
4ஆவது இடம்
அதேபோல 12 புள்ளிகளுடன் இப்போது புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி அடுத்து விளையாடும் 4இல் இரண்டு போட்டிகளில் வென்றாலே எளிதாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். 4ஆவது இடத்திற்குத் தான் மொத்தம் 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் கொல்கத்தா, ராஜஸ்தான்., பஞ்சாப் ஆகிய 3 அணிகள் அடுத்து வரும் 4இல் குறைந்தது 3இல் வெல்ல வேண்டும். மும்பை அணிக்கு நெட் ரன்ரேட் மோசமாக இருப்பதால் அடுத்து வரும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.