ஒத்திவைக்கப்பட்ட தொடர்
ஐபிஎல் 2021 தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 29 போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், நான்கு அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பை அடுத்து இந்த தொடர் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
கேகேஆர், சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மற்ற அணிகளை சேர்ந்த வீரர்களுக்கும் தொடர்ந்து கொரோனா டெஸ்ட்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பிசிசிஐ அறிவிப்பு
இதையடுத்து இன்று காலை ஐபிஎல் நிர்வாகக் குழு மற்றும் பிசிசிஐ உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட அவசரக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளது.
மகிழ்ச்சியாக இருங்கள்
இந்த கடினமான நேரத்தில் மக்களுக்கு பாசிட்டிவிட்டியையும் மகிழ்ச்சியையும் அளிக்க விரும்பினோம். ஆனால் அது தற்போது தடைப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுங்கள் என்றும் அந்த அறிக்கையில் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
பிசிசிஐ உறுதி
ஐபிஎல் 2021 தொடரில் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் அனைத்துவிதமான நடவடிக்கையையும் பிசிசிஐ மேற்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டிகளை சிறப்பாக நடத்த உதவிய, வீரர்கள், அணிகள், ஸ்பான்சர்ஸ், பயிற்சியாளர்கள் ஆகியோருக்கும் பிசிசிஐ நன்றி தெரிவித்துள்ளது.