மைதானங்கள்
14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய 6 மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. டெல்லி மற்றும் அகமதாபாத்தில் தலா 8 போட்டிகளும் மீதமுள்ள மைதானங்களில் 10 போட்டிகளும் நடைபெறவுள்ளன.
அணிகளுக்கு செக்
குறைந்த அளவிலேயே மைதானங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அனைத்து அணிகளுக்கு பொதுவான இடத்திலேயே ஆட்டங்கள் நடைபெறும். எந்தவொரு அணிக்கும் ஹோம் அட்வாண்டேஜ் கிடையாது. பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் ஹோம் அட்வாண்டேஜ் குறித்து முறையிட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிருப்தி
இந்நிலையில் ஐபிஎல் அறிவிப்பு குறித்து பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ள பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், நாளொன்றுக்கு 9,000 கொரோனா பாதிப்புகளை சந்திக்கும் மும்பையில் ஐபிஎல் போட்டியை நடத்தும் போது பஞ்சாப்பில் ஏன் நடத்தமுடியாது என கேள்வி எழுப்பியுள்ளார். மாநில அரசு அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
காரணம் என்ன
இந்த விவகாரத்தில் முன்பே விளக்கமளித்திருந்த பிசிசிஐ, பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வலுத்து வருகிறது. ஐபிஎல் போட்டியின் போது போராட்டக்காரர்களால் எந்த அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது. மேலும் அப்படி ஏதேனும் நடந்தால் உலகின் பல ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும். எனவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாகவே போட்டியை பஞ்சாபில் நடத்தவில்லை என தெரிவித்துள்ளது.