தொடக்கம்
ராயல் சேலஞ்சர்ஸ் அணி மும்பை அணிக்கு எதிராக மோதிய முதல் போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தியதும், மேக்ஸ்வெல் (39 ரன்), டிவில்லியர்சின் (48 ரன்) ரன் பங்களிப்பும் பெங்களூருவுக்கு வெற்றியை தேடித்தந்தது. எனினும் அந்த அணிக்கு பேட்டிங்கில் தொடக்கம் சரியாக அமையவில்லை. புதிய ஓப்பனிங் களமிறங்கிய வாசிங்டன் சுந்தர் 10 ரன்களுக்கு வெளியேறினார்.
திரும்பும் முக்கிய வீரர்
இந்நிலையில் 2வது போட்டியில் ஓப்பனிங் வீரர் தேவ்தத் பட்டிக்கல் அணிக்கு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனில் கலக்கிய தேவ்தத் படிக்கல் இந்தாண்டு தொடக்கத்திலேயே கொரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்டார். அவர் குணமடைந்த போதும் முதல் ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இந்த சூழலில் அவர் 2வது போட்டியில் களம் காணவுள்ளார்.
ஓப்பனிங் உறுதி
இதுகுறித்து பேசியுள்ள அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், தேவ்தத் பட்டிக்கலை ஓப்பனிங் களமிறக்க பரிசீலனை செய்து வருவதாகவும், அவர் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடுவார் எனவும் தெரிவித்தார். முன்னதாக அணிக்கு திரும்பியது குறித்து பேசிய பட்டிக்கல், நான் 100 சதவீதம் நன்றாக உள்ளேன். ஐபிஎல் போட்டியில் ஆட ஆர்வத்துடன் காத்துள்ளேன் என தெரிவித்தார்.
தீவிர முயற்சி
இந்த தொடரில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி இதே மைதானத்தில் தனது முதல் ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் தோல்வியை தழுவியது. சரிவில் இருந்து மீள்வதற்கு சன்ரைசர்ஸ் அணியும், வெற்றியை தொடர வேண்டும் என ஆர்சிபி அணியும் மும்முரத்துடன் களமிறங்கவுள்ளனர்.