200வது போட்டி
ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்றாக ஆர்சிபி உள்ளது. கடந்த முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இறுதி போட்டிக்கு முன்னேறவில்லை. எனவே இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசுர பலத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக தனது 4வது லீக் ஆட்டத்தை எதிர்கொள்ளவுள்ளது.
கோலி சாதனை
இந்த போட்டியில் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டவுள்ளார். விராட் கோலி இந்த போட்டியில் இன்னும் 51 ரன்கள் மட்டும் எடுத்தால் ஐபிஎல் தொடரில் 6000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். அவர் தற்போதுவரை 195 போட்டிகளில் ஆடி 5949 ரன்களை எடுத்துள்ளார். இதுவரை ஆடியுள்ள 3 போட்டிகளில் கோலி 71 ரன்களே எடுத்துள்ளார். எனவே இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.பி.டிவில்லியர்ஸ்
இந்த சீசனில் அதிரடி காட்டி வரும் டிவில்லியர்ஸ், ஐபிஎல்-ல் இதுவரை 172 போட்டிகளில் ஆடி 4974 ரன்கள் எடுத்துள்ளார். இவர் இன்றைய போட்டியில் இன்னும் 26 ரன்கள் அடித்தால் ஐபிஎல்-ல் 5000 ரன்களை கடந்த 6வது வீரராவார். இதற்கு முன்னர் அயல் நாட்டு வீரராக டேவிட் வார்னர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
க்ளென் மேக்ஸ்வெல்
இந்தாண்டு பஞ்சாப் அணியால் கழட்டிவிடப்பட்டு, தற்போது ஆர்சிபி அணியில் சிறப்பாக ஆடி வருபவர் ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல். இவர் இன்றைய போட்டியில் இன்னும் ஒரே ஒரு சிக்ஸர் அடித்தால் ஐபிஎல்-ல் 100 சிக்ஸர்களை அடித்த 23வது வீரர் ஆவார். கடந்த 3 போட்டிகளில் மேக்ஸ்வெல் 8 சிக்ஸர்களை விளாசியுள்ளார். எனவே இன்றைய போட்டியில் கண்டிப்பாக அவர் புதிய மைல்கல்லை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.