ஜெர்ஸி நிறம்
விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் இயற்கையையும், மரங்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரே ஒரு போட்டியில் பச்சை நிறத்தினாலான ஜெர்ஸியை அணிந்து விளையாடுவது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனாவை எதிர்த்து போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு போட்டியில் நீள நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய முயற்சி
14வது ஐபிஎல் தொடர் ஆட்டங்கள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சூழலில் வரும் 19ம் தேதி முதல் அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இதில் வரும் 20ம் தேதியன்று ஆர்சிபி அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. அந்த போட்டியில் ஆர்சிபி நீல நிற ஜெர்ஸியை பயன்படுத்தவுள்ளது.
ஜெர்ஸி ஏலம்
போட்டி முடிந்த பிறகு ஒவ்வொரு வீரரும் அவர்கள் அணிந்திருந்த ஜெர்ஸியில் கையெழுத்திட்டு அதனை ஏலத்திற்கு விடவுள்ளனர். அதன் மூலம் பணத்தை ஆக்சிஜன் வாங்குவதற்கு நிதியுதவியாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஜெர்ஸியின் பின் புறத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளவும், பாதுகாப்பாக இருங்கள் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
புதிய வீடியோ
இதுகுறித்து ஆர்சிபி வெளியிட்டுள்ள வீடியோவில் அணியின் கேப்டன் விராட் கோலி இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர், கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளின் மேம்பாட்டிற்காக இந்த தொகை கொடுக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார், மேலும் அவர் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், வாய்ப்பு இருப்பவர்கள் கொரோனா தடுப்பூசியை உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
தொடரில் முன்னிலை
கடந்த முறை ப்ளே ஆஃப் வரை சென்ற ஆர்சிபி அணி இந்த முறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள இந்த அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. தற்போது அணியில் சில மாற்றங்களையும் செய்துள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.