முதல் போட்டி
ஐபிஎல் தொடரில் கடந்த 2 வருடங்களாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரின் போது காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் டெல்லி அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். அணியில் அஸ்வின், ஸ்மித் என பல அனுபவ வீரர்கள் உள்ள போதும் ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தோனிக்கு எதிராக போட்டி
இந்நிலையில் தனது முதல் போட்டி குறித்து ரிஷப் பண்ட் பேசியுள்ளார், அதில் அவர், போட்டியின் போது எம்.எஸ்.தோனிக்கு எதிராக டாஸின் போது நிற்பதே எனக்கு மிகப்பெரிய ஸ்பெஷலான தருணமாகும். நான் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். நிறைய அனுபவத்தை பெற்றேன். அவைகளை தோனிக்கு எதிராகவே பயன்படுத்த காத்துள்ளேன்.
வியூகங்கள்
நான் என் சீனியர் ப்ளேயர்களான ஷிகர் தவான், அஸ்வின், ரஹானே ஆகியோரிடம் ஃபீல்ட் செட்டிங்ஸ் மற்றும் வியூகங்கள் குறித்து நிறைய ஆலோசனைகளை பெற்றேன். பயிற்சியாளர் பாண்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப் ஆகியோரிடம் கலந்தாலோசித்தேன். அணியில் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்கள் என கலந்து உள்ளதால் இந்த முறை வித்தியாசமாக ஏதேனும் செய்து காட்டுவோம் என தெரிவித்தார்.
ஃபீல்ட் செட்டிங்ஸ்
நான் இன்று கேப்டனாக முதல் போட்டியில் பங்கேற்கவுள்ளேன் என எதை பற்றியும் பெரிதாக யோசிக்கவில்லை. நான் சாதரணமான விஷயங்களை 100% உழைப்புடன் செய்வேன். ஒரு விக்கெட் கீப்பருக்கு பொதுவாகவே ஃபீல்ட் செட்டிங்ஸ் குறித்து ஐடியாக்கள் கிடைக்கும். எனவே ஃபீல்ட் செட்டிங் குறித்து பெரிய மாற்றம் எனக்கு ஏற்படாது.
கட்டாயத்தில் இரு அணிகள்
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி படு மோசமாக விளையாடியது. இதனால் ப்ளே ஆஃப்-க்கு கூட அந்த அணியால் செல்ல முடியவில்லை. எனவே இந்த தொடரில் தொடக்கம் முதலே அதிரடி காட்டும் திட்டத்தோடு களமிறங்குகிறது. மறுபுறம் கடந்தாண்டு இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டிய குறிக்கோளுடன் களமிறங்குகிறது.