டெல்லி அணி சொதப்பல்
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக தவான் 36 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களையும் குவித்தனர். மற்ற எந்த வீரர்ளாலும் பெரிய அளவில் மிடில் ஆர்டரில் ரன் குவிக்க முடியாமல் போனது. 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது தொடக்கமே அதிரடி காட்டியது.
சிறந்த தொடக்கம்
வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 96 ரன்களை குவித்தனர். ஆனால் 16-வது ஓவருக்கு பின்னர் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 13 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவை என்ற நிலை வந்தபோது விக்கெட்டுகள் பறிபோகின. குறிப்பாக 17வது, 18வது, 19வது ஓவர்களில் டெல்லி அணியின் அனைத்து நட்சத்திர பவுலர்களும் வீசி ரன்களை கட்டுப்படுத்தினர்.
த்ரில் வெற்றி
ஆனால் கடைசி ஓவரில் அதனை மொத்தமாக வாரி கொடுத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். 20ஆவது ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஷ்வின் பந்து வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் த்ரிப்பாதி சிங்கிள் எடுக்க 2-வது பந்தை டாட் பால் ஆனது. 3வது பந்தில் ஷகிப் அல் ஹசன் அவுட்டானார். 4-வது பந்தில் சுனில் நரேனும் ஆட்டமிழக்க இரண்டு பந்துகளுக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் திரிப்பாதி சிக்சர் அடித்து கொல்கத்தா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
பண்ட் தவறு
சார்ஜா போன்ற சிறிய மைதானத்தில் ஸ்பின்னர்களின் ஓவர்களை முன்கூட்டியே வீசி முடிக்க வேண்டும். ஆனால் இலக்கு சிறியதாக இருந்ததால் ரிஷப் பண்ட் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களையும் முன்கூட்டியே பயன்படுத்தி விட்டார்.
இதன் காரணமாக கடைசி ஓவரை வேறு வழியின்றி அஷ்வின் வீச வேண்டியதாயிற்று. கடைசி ஓவரில் ஸ்பின்னர்கள் வீசும்போது எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. எனவே ஏதேனும் ஒரு வேகப்பந்துவீச்சாளரை இறுதி ஓவருக்காக வைத்திருந்திருக்க வேண்டும் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.