வெற்றி
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சரிய, ஷாருக்கான் மட்டும் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி டூப்ளசிஸ் மற்றும் மொயின் அலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியது.
ஏமாற்றிய இளம் வீரர்
சென்னை அணியின் தொடக்க வீரர் ருத்ராஜ் கெயிக்வாட், இலக்கு குறைவாக இருந்த போதும், 5 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார். முதல் போட்டியிலும் இவர் 5 ரன்களுக்கு வெளியேறியிருந்தார். சிஎஸ்கே அணியில் இந்தாண்டு அனுபவ வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கடந்தாண்டு சிறப்பாக செயல்பட்டார் என்ற காரணத்திற்காக ருத்ராஜுக்கு தோனி வாய்ப்பு கொடுத்து வந்தார்.
புது வீரருக்கு வாய்ப்பு
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் கெயிக்வாட் ஏமாற்றம் அளித்ததால் அணி ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். எனவே அடுத்த போட்டியில் அவர் உட்கார வைக்கப்படுவார் எனக்கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ஓப்பனிங்கில் ராபின் உத்தப்பாவை களமிறக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது.
முடிவெடுப்பாரா தோனி
ஐபிஎல்-ல் அனுபவ வீரரான உத்தப்பா, கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியில் ஆடி வந்தார். ஆனால் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனிடையே இந்தாண்டு சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் அவரை ரூ. 3 கோடிக்கு வாங்கியுள்ளது. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் களமிறங்க வாய்ப்புக்கொடுத்தால் சிறப்பாக ஆடுவேன் என உத்தப்பா தெரிவித்திருந்தார். எனவே அடுத்த போட்டியில் உத்தப்பாவுக்கு ஓப்பனிங் வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.