பிரச்னை
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் அணியில் தொடக்கம் சற்று சரிவாகதான் இருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பட்லர் மற்றும் மன்னன் வோஹ்ரா அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 2வது விக்கெட்டிற்கு களமிறங்கிய டேவிட் மில்லரும் சிராஜின் பந்தில் எல்.பி.டபள்யூ முறையில் டக் அவுட்டானார்.
தோல்வி
இதனால் அந்த அணி 18 ரன்களுக்குள் 3 விக்கெட்களை பறிகொடுத்தது. பின்னர் களமிறங்கிய ஷிவம் தூபே(46), ராகுல் தேவட்டியா (40) ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை மீட்டனர். ஒரு புறம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுபுறம் இவர்களின் நல்ல ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 177/9 ரன்கள் எடுத்தது. எனினும் ஆர்சிபி அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 16.3 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து அசால்டாக வெற்றி பெற்றது.
போராடுவோம்
இந்த தோல்வி குறித்து பேசிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், எங்கள் அணி பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடி ரன்களை குவித்தனர். எனினும் ஆர்சிபி அணி சிறப்பான ஆட்டத்தால் விக்கெட் இழப்பின்றி இலக்கை துரத்தினர். எங்களின் பேட்டிங்கை சரிசெய்ய சற்று நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு எங்களின் பேட்டிங் குறித்து உண்மையான விமர்சனங்கள் தேவை. நாங்கள் தொடர்ந்து தோற்று வருகிறோம் தான், எனினும் தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தார்.
கட்டாய வெற்றி
இந்த தொடரில் ராஜஸ்தான் அணி பெறும் 4வது தோல்வி இது. எனவே புள்ளிப்பட்டியலிலும் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே இனி வரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலுக்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணி அடுத்ததாக நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.