ஐபிஎல்
ஐபிஎல் தொடரின் 2வது பாதியில் அயல்நாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதத்தில் வருவதால் அதற்கு தயாராகும் வகையில் சர்வதேச போட்டிகளில் அவர்கள் விளையாட வேண்டியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள், அந்நாட்டு வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்பமாட்டோம் என அறிவித்துவிட்டது. ஆஸ்திரேலிய அணி குழப்பத்தில் உள்ளது.
பிசிசிஐ ஆப்பு
இந்நிலையில் அயல்நாட்டு வீரர்களுக்கு செக் வைத்துள்ளது பிசிசிஐ. அதாவது ஐபிஎல்-ன் 2வது பாதியில் கலந்துகொள்ளாமல் இருக்கும் அயல்நாட்டு வீரர்களுக்கு, அந்தந்த அணிகள் பாதி ஊதியம் மட்டுமே வழங்கவேண்டும் என கூறியுள்ளது. ஐபிஎல் ஒப்பந்தப்படி, தொடர் பாதியில் ரத்தாகிவிட்டால், வீரர்களுக்கான முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தொடர் மீண்டும் நடைபெற்று அதில் வீரர்கள் பங்கேற்கவில்லை என்றால் ஊதியம் குறைக்கப்படும்.
ஊதிய கணக்கீடு
ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் மற்றும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல்-ல் பங்கேற்க மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது. எனவே அவர்களின் மொத்த ஊதிய தொகையை போட்டிகளுக்கு ஏற்றவாறு வகுக்கப்பட்டு, பின்னர் எத்தனை போட்டிகளில் விளையாடியுள்ளார்களோ அதற்கு மட்டும் ஊதியம் வழங்கப்படும். உதாரணத்திற்கு பேட் கம்மின்ஸ், கொல்கத்தா அணியால் ரூ.15.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு சுமார் ரூ. 7.5 கோடி மட்டுமே ஊதியம் வழங்கப்படும்.
இந்திய வீரர்களின் நிலை
2011ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர்களுக்காக புதிய ஒப்பந்த முறை கொண்டு வரப்பட்டது. அது வீரர்களின் காப்பீடு திட்டம் ஆகும். அதன்படி, பிசிசிஐ-ன் ஒப்பந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு மட்டும், ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்றாலோ, காயம் ஏற்பட்டு வெளியேறினாலோ, சுயவிருப்பத்தின் பெயரில் வெளியேறினாலோ, இந்த காப்பீடு திட்டத்தின்படி முழு ஊதியம் வழங்க வேண்டும்.