ஐபிஎல் தொடர்
ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக கடந்த மே 29ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனைக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தேதிகள் குறித்த எந்த விவரமும் இறுதி செய்யப்படாமல் இருந்தன. இதுகுறித்து இறுதி முடிவுகளை எடுப்பதற்காக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ள மூத்த அதிகாரிகள் துபாய் சென்றுள்ளனர்.
ஐபிஎல் தேதிகள்
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கான தேதிகள் உறுதி செய்யப்பட்டு விட்டன. அதன்படி ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ளதாகவும், இறுதிப்போட்டி வரும் அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்.14ம் தேதி முடிவடைகிறது. எனவே வீரர்களை அமீரகம் அழைத்து ஏற்பாடுகளை செய்ய நேரம் சரியாக இருக்கும் எனத்தெரிகிறது.
27 நாட்கள் விண்டோ
இதற்கு முன்னர் 10 டபுள் ஹெட்டர்ஸ் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அமீரகத்தில் கடும் வெயில் இருக்கும் என்பதால் டபுள் ஹெட்டர்ஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே போட்டி நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதாவது மொத்தம் உள்ள 31 போட்டிகளை, 27 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கு அனுமதி
கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என கங்குலி தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்தும் அமீரக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் கொரோனா பாதிப்பு பெரியளவில் இல்லை என்பதால், பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது. இதனால் பிசிசிஐ-ன் வருமானம் இன்னும் கூடவுள்ளது. குறிப்பாக இறுதிப்போட்டி நடைபெறும் அக்.15ம் தேதி இந்தியாவில் தசரா திருவிழாவாகும். அதே போல அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் அமீரகத்தில் விடுமுறை தினம். எனவே கூட்டம் அதிகளவில் கூட வாய்ப்புள்ளது.
அதிகரிக்கும் வருமானம்
மீதமுள்ள போட்டிகளை நடத்தி முடித்துவிட்டால் பிசிசிஐ-க்கு ரூ.2500 கோடி வரை வருமானம் கிடைக்கும். இந்த தொகையானது தற்போதைக்கு போட்டு வைத்துள்ள திட்டமாகும். ஒருவேளை அனைத்து போட்டிகளும் பார்வையாளர்களுடன் நடைபெற்றால், இந்த தொகையில் பெரும் மாற்றம் ஏற்படும். பிசிசிஐ-க்கு நினைத்ததை விட அதிக வருமானம் கிடைக்கும்.
தலைவலி
பிசிசிஐ-க்கு கடைசியாக இருக்கும் ஒரே ஒரு தலைவலி, அயல்நாட்டு வீரர்களின் பங்கேற்பு ஆகும். ஐபிஎல் போட்டிகளுக்காக கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரை ஒரு வார காலம் முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே போல வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் ஐபிஎல்-ல் பங்கேற்பார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால் இங்கிலாந்து வாரியம் தங்களது வீரர்களை அனுப்ப முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த பிரச்னைகளுக்கும் பிசிசிஐ விரைவில் தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.