மிக முக்கிய போட்டி
இந்த போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணியின் இந்த சொதப்பலுக்கு காரணம் அந்த அணியின் ப்ளேயிங் 11 அடிக்கடி மாற்றப்படுவது தான்.
ப்ளேயிங் 11
அந்தவகையில் இன்றைய போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. டாப் ஆர்டரில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலே சேர்க்கப்படவில்லை. சமீபத்தில் கெயிலின் ஃபார்ம் சிறப்பாக இருக்கும் போதும் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதே போல சிறப்பாக பந்துவீசி வந்த ரவி பிஷ்னாயும் ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் விமர்சனங்கள் முன்வைத்துள்ளனர்.
என்ன மாற்றம்
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றவர் ரவி பிஷ்னாய். ஆனால் அவரையே நீக்கிவிட்டு புதிதாக இஷான் பொரோல் எனும் அறிமுக வீரரை வைத்து அந்த அணி சோதனை மேற்கொண்டு வருகிறது. இது முன்னாள் வீரர்களையும் குழப்பத்தை ஆழ்த்தியுள்ளது.
சேவாக் கிண்டல்
இந்நிலையில் பஞ்சாப் அணியின் இந்த மாற்றம் குறித்து முன்னாள் வீரர் சேவாக் கடும் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சேவாக், குழந்தைகள் கூட தங்களது 'டயப்பரை' அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்காது. ஆனால் இந்த பஞ்சாப் கிங்ஸ் அணி ஒவ்வொரு போட்டியிலும் ப்ளேயிங் 11- ஐ மாற்றி வருகிறது என கிண்டலடித்துள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.