படு தோல்வி
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தொடர்ந்து சொதப்பும் ஐதராபாத்
இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடர்ந்து 3-வது தோல்வியைச் சந்தி்த்துள்ளது. இந்த 3 போட்டிகளிலுமே குறைந்த ஸ்கோரை சேஸிங் செய்ய முயன்று, கடைசி நேர பிரஷரால் தோல்வியை சந்தித்துள்ளது.
பும்ரா
மும்பை அணி 150 ரன்கள் என்ற குறைந்த இலக்கை சன்ரைசர்ஸ் நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டதில் பும்ராவின் அபாரமான பந்துவீச்சு மிக முக்கிய காரணம். ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 4-வது முறையாக ஒரு பவுண்டரிகூட எதிரணியை அடிக்கவிடாமல் பும்ரா பந்துவீசியுள்ளார். 4 ஓவர்கள் வீசிய பும்ரா 14 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இதில் 12 டாட்பந்துகள் அடங்கும்.
சேவாக் புகழாரம்
இதுகுறித்து பேசியுள்ள சேவாக், மும்பை அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா பிரமாஸ்திரம் போன்றவர். அவரை இக்கட்டான சூழ்நிலையில் பயன்படுத்தலாம். பும்ரா அணியில் இருக்கும் வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிதான் என தெரிவித்துள்ளார்.
வெற்றிக்கு காரணம்
க்ருணால் பாண்டியாவின் 2 ஓவர்களில் பேர்ஸ்டோ அதிரடி காட்டியதால் கெயிரன் பொல்லார்ட் பவுலிங்கிற்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவர் விக்கெட் எடுக்கவில்லை. ஐதராபாத் அணியில் விஜய் சங்கர் செயல்பட்டதை போல பொல்லார்ட் செயல்படுவார் என நினைத்துவிட்டார்கள். ஆனால் ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக பந்துவீசியிருப்பார் என நான் நினைக்கிறேன். அவர் பந்தின் வேகத்தை மாற்றி வீசுவதில் கில்லாடி. இதனால் தான் மும்பை அணி குறைந்த ஸ்கோரை கூட கட்டுப்படுத்தி வெற்றி பெற முடிகிறது என தெரிவித்துள்ளார்.