இலக்கு
நேற்று நடைபெற்ற போட்டியில் முதல் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் (56), ரோஹித் ஷர்மா (43) இருவர் மட்டும் சிறப்பாக ஆட, மற்ற வீரர்கள் ரன் எடுக்க திணறி அடுத்தடுத்து வெளியேறினர். கொல்கத்தா அணி சார்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
நல்ல தொடக்கம்
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் நிதிஷ் ராணா (57), ஷுப்மன் கில் (33) மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 142/7 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது.
சொதப்பல்
அனைவரும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுவிடும் என நினைத்திருந்தனர்.
அந்த அணி வெற்றிபெற கடைசி 28 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. களத்தில் தினேஷ் கார்த்திக் (8*), ஆண்ட்ரே ரஸ்ஸல்(9) இருவரும் சிறப்பாக விளையாடவில்லை. குறிப்பாக 18வது ஓவரில் க்ருணால் பாண்டியா ஓவரில் வெறும் 3 ரன்களே அடித்தனர். இதெல்லாம் மோசமான தோல்விக்கு வழிவகுத்தது.
காட்டம்
இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள முன்னாள் வீரர் சேவாக், இது கேவலமான தோல்வி. களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக், ரஸ்ஸல் இருவரும் போட்டியைக் கடைசி ஓவர் வரை எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்து ஆடினார்கள் போல. தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம். நிதிஷ் ராணா, கில் ஆகியோர் சிறப்பாக தொடக்கத்தை அளித்த போதும் அந்த அணியால் வெற்றி பெற முடியவிலை என்பது கேவலம்.
சரமாரி கேள்வி
முதல் போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் இயான் மோர்கன், வீரர்கள் அவர்கள் விருப்பப்படி சிறப்பாக விளையாடுவார்கள் எனக்கூறியிருந்தார். ஆனால் தினேஷ் கார்த்திக், ரஸ்ஸல் ஆடியது ஒன்று அப்படி தெரியவில்லை. நிதிஷ் ராணா, ஷுப்மன் கில் யாரேனும் ஒருவர் கடைசி ஓவர் வரை நிலைத்து நின்றிருக்க வேண்டும். வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியில் எப்படி கோட்டைவிடுவது என்பதை இப்போட்டியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.