கடந்த சீசன்
ஐபிஎல் தொடரில் இதுவரை 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள கொல்கத்தா அணி கடந்த ஆண்டு ப்ளே ஆஃப்-க்கு கூட முன்னேறவில்லை. தொடரின் நடுவே தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக மோர்கனையும் கேப்டனாக நியமித்து பார்த்தார்கள். எனினும் அந்த அணி கடந்த சீசனில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. கடந்த 2014ம் ஆண்டு 2வது முறையாக கோப்பை வென்றதற்கு பிறகு ஒரு முறை கூட இறுதிபோட்டிக்கு முன்னேறவில்லை. இதன் காரணமாக இந்தாண்டு பெரும் திட்டத்துடன் கம்பேக் கொடுக்க தயாராகியுள்ளது.
கடும் பயிற்சி
அந்த வகையில் மும்பையில் அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. இதற்காக மோர்கன், தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தி, ராகுல் திரிப்பாதி, கம்லேஷ் நாகர்கோட்டி, சந்தீப் வாரியர் உள்ளிட்டோர் அணியுடன் இணைந்துள்ளனர். மீதமுள்ள வீரர்கள் விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குசும்பு
இந்நிலையில் இந்தாண்டு கோப்பையை வெல்வது குறித்து அணியின் உரிமையாளர் ஷாருக்கான் குசும்பு தனமாக பதில் அளித்துள்ளார். ட்விட்டரில் அவரிடம், கொல்கத்தா அணி இந்த முறை கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு ரிப்ளை செய்துள்ள ஷாருக்கான், வெல்லும் என நம்புகிறேன். ஏனென்றால் நான் அந்த ஐபில் கோப்பையில் தான் இனி டீ குடிக்கலாம் என விரும்புகிறேன் என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். இது ஒரு புறம் நகைச்சுவையாக இருந்தாலும், மற்றொரு புறம் ஐபிஎல் கோப்பையை இப்படியா கூறுவது என விமர்சனங்களும் எழுந்துள்ளது.
பலமான அணி
கொல்கத்தா அணி தனது முதல் போட்டியாக வரும் ஏப்.11ம் தேதி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தாண்டு ஐபிஎல்-ல் அசத்துவதற்கு எவ்வளவு தொகையை ஏலத்தில் செலவழித்தாலும் பரவாயில்லை என்று நினைத்த கொல்கத்தா அணி நிர்வாகம், இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் 8 வீரர்களை ரூ.10.75 கோடிக்கு வாங்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனை ரூ.3.2 கோடிக்கு அந்த அணி வாங்கியுள்ளது. அதே போல, ஹர்பஜன் சிங், கருண் நாயர், பென் கட்டிங்ஸ் உள்ளிட்ட வீரர்களையும் களமிறக்கியுள்ளது.