விறுவிறுப்பான போட்டி
மும்பை - கொல்கத்தா போட்டியை போலவே நேற்று நடைபெற்ற இந்த போட்டியும் விறுவிறுப்பாக சென்றது. ஆர்சிபி அணி நிர்ணயித்த 149 என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியில் தொடக்கத்தில் வார்னர் 54, மணீஷ் பாண்டே 38 ரன்கள் எடுத்தனர். இவர்களின் ஆட்டத்தால் ஐதராபாத் அணி சுலபமாக வென்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது.
சபாஷ் அகமது
ஆட்டத்தின் போக்கை இளம் வீரர் சபாஷ் அகமது மாற்றினார். அவர் வீசிய 17வது ஓவரில் பிரைஸ்டோ, மணீஷ் பாண்டே, அப்துல் சமத் அவுட் ஆனார்கள். இந்த ஓவரிலேயே போட்டி மாறிவிட்டது. அதற்கு அடுத்த ஓவரிலேயே விஜய் சங்கரும் அவுட் ஆக வரிசையாக ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து பேட்டிங் ஹைதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து வெறும் 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
சிறந்த ஆட்டத்திற்கு காரணம்
இதுகுறித்து பேசிய ஸ்பின்னர் சபாஷ் அகமது, அது மிகவும் இக்கட்டான சூழலாக இருந்தது. ஆனால் கேப்டன் விராட் கோலி எனது திறமையை நம்பி எனக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்ததால் சிறப்பாக ஆட முடிந்தது. 17வது ஓவரில் பிட்ச் ஸ்பின்னருக்கு சாதகமாக இருந்தது. அதனால் வெற்றிகரமாக 3 விக்கெட்களை சாய்த்தேன். நான் அதற்கடுத்த ஓவர்களும் வீச தயாராக இருந்தேன். ஆனால் கோலி சிராஜ் மீதும் நம்பிக்கை வைத்திருந்தார். அவரும் கடைசி ஓவர்களில் சிறப்பாக வீசக்கூடியவர் தான் எனத் தெரிவித்துள்ளார்.
நமக்கான சோதனை
நாம் பிரஷரான சூழலை எதிர்கொள்வது தான் நமது திறமைக்கான உண்மையான சோதனையாகும். நான் அதுபோன்ற சூழல்களில் ஈடுபடவே முயல்வேன். நான் என் மீது வைத்த நம்பிக்கையை கேப்டன் கோலியும் என் மீது வைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்து ரன் எடுப்பது சுலபம். ஆனால் 2வது பேட்டிங்கில் ரன் குவிப்பது கடினமான ஒன்று எனத்தெரிவித்துள்ளார்.