அயல்நாட்டு வீரர்கள்
அயல்நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வரும் விமானங்களுக்கு வரும் மே 15ம் தேதி வரை அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. இதனால் ஐபிஎல்-ல் பங்கேற்க வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வீடு திரும்ப முடியாத கவலையில் உள்ளனர். அவர்கள் தற்போது மாலத்தீவில் முகாமிட்டு, ஆஸ்திரேலிய அரசின் அனுமதிகாக காத்துள்ளனர்.
சோனு சூட் பதிவு
இந்நிலையில் அவர்களை வீட்டிற்கு அனுப்ப சோனு சூட்டிடம் கோரிக்கை சென்றுள்ளது. ட்விட்டரில் சோனு சூட்டை குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள ரசிகர் ஒருவர், ஆஸ்திரேலிய வீரர்களை வீட்டிற்கு அனுப்பவும் உதவி செய்வீர்களா என கேட்டுள்ளார். ரசிகரின் இந்த வேடிக்கை ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள சோனு சூட், 'உடனடியாக அவர்களின் உடமைகளை எடுத்து ரெடியாக இருக்க சொல்லுங்கள்' எனக் கிண்டலடித்துள்ளார்.
உதவி
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இதற்கு முன்னர் நிஜமாகவே கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அவர் உதவி செய்துள்ளார். ரெய்னாவின் உறவினர் ஒருவர் ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். அது குறித்து ட்வீட் போட்ட ரெய்னா, 65 வயதாகும் எனது அத்தைக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் வேண்டும் என கேட்டிருந்தார்.
ரசிகர்கள் பாராட்டு
ரெய்னாவின் இந்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த சோனு சூட், உங்களது உறவினரின் முழு விவரங்களை எனக்கு அனுப்பி வையுங்கள் சகோதரரே, 10 நிமிடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் அங்கு சென்றுவிடும் என பதிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டப்பட்டது.