அதிரடி ஓப்பனிங்
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, குயிண்டன் டிகாக் முதல் ஓவர் முதலே அதிரடி காட்டினர். முதல் 6 ஓவர்களில் புவனேஷ்வர் குமார், முஜீப் உர் ரஹ்மான், கலீல் அஹ்மது, அபிஷேக் சர்மா என 4 பவுலர்களின் பந்துவீச்சையும் துவம்சம் செய்தனர். குறிப்பாக முஜீப் ரஹ்மான் வீசிய 3வது ஓவரில் அதிகபட்சமாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்ளிட்ட 13 ரன்கள் சேர்ந்தது.
தலைவலி
இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் பவர் ப்ளேவின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் மும்பை அணியின் கணக்கில் சேர்ந்தது. சென்னை பிட்ச் பேட்டிங்கிற்கு சிறிது கடினமாக இருக்கும் எனக்கூறப்பட்ட நிலையில் மும்பை அணியின் ஓப்பனிங் ஜோடி அதனை மாற்றி அமைக்கும் விதமாக அதிரடி காட்டினர். இதனால் அந்த ஜோடியை பிரிக்க வார்னருக்கு தலைவலி ஏற்பட்டது.
விஜய் சங்கர்
இந்நிலையில் சென்னை அணிக்கு மிகவும் பழக்கப்பட்ட தமிழக வீரர் விஜய் சங்கரை பந்துவீச்சுக்கு கொண்டு வந்து வியூகம் வகுத்தார் வார்னர். விஜய் சங்கர் வீசிய ஆட்டத்தின் 7வது ஓவரில் முதல் 2பந்துகள் சிங்கிளாக மாறியது. 3வது பந்தை அவர் ஸ்லோவர் பாலாக வீச இதனை எதிர்பார்காத ரோகித் சர்மா சிக்ஸருக்கு தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய ரோகித் 25 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.
2வது மேஜிக்
இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட வார்னர், மீண்டும் 9 ஓவரிலேயே விஜய் சங்கருக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த ஓவரில் அவர் வீசிய 2வது பந்தை சூர்யகுமார் யாதவ் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார். ஆனால் அதற்கு அடுத்த பந்தில் உஷாரான விஜய் சங்கர் ஸ்லோவர் பாலாக வீச, சூர்யகுமார் யாதவ் மீண்டும் தூக்கி அடித்து கேட்ச் ஆனார். இதனால் பவர் ப்ளேவில் சிறப்பாக ஆடிய மும்பை அணியில் 2 விக்கெட்கள் வீழ்ந்து சற்று தடுமாறியது.