ஐபிஎல் போட்டிகள்
4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். குறிப்பாக முதல் போட்டியில் சிஎஸ்கேவின் அசத்தல் வெற்றி, 2வது போட்டியில் ஆர்சிபியின் தோல்வி, 3வது போட்டியில் கடைசி நேர ட்விஸ்ட் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மீண்டும் கொரோனா
இந்நிலையில் ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது. ஐபிஎல்-ல் பங்கேற்றிருந்த வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று இரவு டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை சேர்ந்த தமிழக வீரர் டி.நடராஜனுக்கு தான் கொரோனா உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா பரவியது எப்படி
பிசிசிஐ-ன் விதிமுறைகளின் படி, ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும், போட்டி முடிந்த பிறகும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் அந்தவகையில் இன்று காலை 6 மணியளவில் ஐதராபாத் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் டி.நடராஜனுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
குழப்பம்
இன்று இரவு ஐதராபாத் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் கொரோனா கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே இன்றிரவு திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
மேலும் 6 வீரர்கள்
நடராஜனுடன் தொடரில் இருந்த அணி வீரர் விஜய் சங்கர், அணி மேலாளர் விஜய் குமார், பிசியோதெரபிஸ்ட் ஷயாம் சுந்தர், மருத்துவர் அன்ஜனா வன்னன், மேலாளர் துஷார் கேதர் மற்றும் நெட் பவுலர் பெரியசாமி கணேஷன் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கள் 6 பேருக்குமே நெகட்டீவ் என முடிவு வந்துள்ளது.