மீண்டும் மலிங்கா
இலங்கை அணியின் நட்சத்திர வீரரான லசித் மலிங்கா சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். டி20 தொடர்களில் மட்டுமே பங்கேற்று வந்த அவர் கடைசியாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு எந்த தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
விரைவில் ஆலோசனை
இந்நிலையில் இவர் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளார். இதுகுறித்து பேசிய இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் விக்ரமசிங்கே, மலிங்காவை அடுத்து வரும் சர்வதேச டி20 போட்டிகளில் ஆட வைக்க முடிவு செய்துள்ளோம். இந்தாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் டி20 உலகக்கோப்பை தொடர் வரவுள்ளது. எனவே அதற்காக அணியை தயார் செய்ய அணியில் லசித் மலிங்கா தேவை. இதற்காக அவரிடம் கூடிய விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.
சிறந்த வீரர்
இலங்கையின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவரான மலிங்காவை நாங்கள் எப்போதும் மறந்திட மாட்டோம். அவரின் சாதனைகள் சொல்லும் அவர் எப்படிபட்ட வீரர் என்று. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவரை நேரில் சந்தித்து போட்டிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மலிங்கா பதில்
இதுகுறித்து பதிலளித்துள்ள லசித் மலிங்கா, நான் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டேன். ஆனால் டி20ல் ஒய்வு பெறவில்லை. என்னை போன்ற மூத்த வீரரிடம் இருந்து எப்படி சிறப்பான ஆட்டத்தை தேர்வு குழு பெறவுள்ளது என்பதை காண ஆவலுடன் உள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்வில், நீண்ட இடைவெளிகளை சந்தித்துள்ளேன். பின்னர் பல முறை சிறப்பான கம்பேக்கால் நிரூபித்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இதுவரை 85 சர்வதேச டி20 களில் ஆடியுள்ள அவர் 107 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.