ஐபிஎல் தொடர்
ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபிக்கும் சஞ்சு சாம்சன் சர்வதேச போட்டிகளில் தொடக்கத்திலேயே சொதப்பி ஏமாற்றத்தை சந்திக்கிறார். 2015ஆம் ஆண்டே இந்திய அணியில் அறிமுகமான சஞ்சு சாம்சன், இதுவரை ஒரேயொரு ஒருநாள், 10 டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருக்கிறார். தொடர்ச்சியாக அவர் செய்யும் தவறுகளால் அவரை தேர்வு செய்ய அணித் தேர்வர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
டி20 வாய்ப்பு
கடைசியாக கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தில் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அங்கும் படுமோசமாகச் சொதப்பினார். இதனால், மீண்டும் ஐபிஎல்-ல் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இருப்பினும், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் வெறும் 4 ரன்கள் மட்டும் அடித்து ஏமாற்றத்தை கொடுத்தார். அவரின் இந்த தொடர் சொதப்பலுக்கு ஷாட் தேர்வுகளே காரணமாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
சாம்சன் செய்த தவறு
இந்நிலையில் அது குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சஞ்சு சாம்சனின் ஷாட் செலக்ஷனில்தான் பிரச்னை இருக்கிறது. அவர் தன்னை பெரிய ஹிட்டர் போல நினைத்துக்கொண்டு வந்த உடனேயே பேட்டை சுழற்றுகிறார். இலங்கைக்கு எதிரான போட்டியில்கூட இதே தவறைத்தான் செய்தார். இரண்டாவது, மூன்றாவது இடத்தில் களமிறங்கும் இவர், எடுத்த உடனே முதல் பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயற்சிக்கிறார். அது முடியவே முடியாத காரியம்.
நிதானமாக இருங்கள்
ஒரு பேட்ஸ்மேன் என்னதான் நல்ல பார்மில் இருந்தாலும், களமிறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர்களை விளாச முடியாது. முதலில் சந்திக்கும் சில பந்துகளை நிதானமாக எதிர்கொண்டால் மட்டுமே அடுத்த பந்துகளில் தன்மையை உணர்ந்து அதிரடி காட்ட முடியும். கால்களை சரியாக, சுலபமாக நகர்த்தி விளையாட முடிந்தாலே போதும், ரன்களை குவிக்க முடியும். இதனை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கடைசி வாய்ப்பு
சஞ்சு சாம்சன் திறமையான வீரர். அவர் தனது திறமையை வீண் செய்துவிடக்கூடாது. எந்த பந்தை அடித்து விளையாட வேண்டும் என்ற யுக்தி தெரிந்துவிட்டாலே சாம்சனால் சிறப்பாக விளையாட முடியும். முதல் வரிசையில் களமிறங்கி, டெய்ல் என்டர் போல் சுத்துவது வேலைக்கு ஆகாது. எனவே அதனை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்திய அணிக்கு இனி இவரால் திரும்ப முடியாது என கவாஸ்கர் அட்வைஸ் தெரிவித்துள்ளார்.