ஐபிஎல் போட்டி
ஐபிஎல்-ல் முதல் சில போட்டிகளில் சதம் மற்றும் அரைசதம் என அசத்தும் சஞ்சு சாம்சன் அதன் பிறகு 5 ரன்கள் 10 ரன்கள் என மிக மோசமாக வெளியேறுவார். கடந்த வருடமும் சஞ்சு சாம்சன் இதேபோல் முதல் சில போட்டிகளில் நன்றாக விளையாடி, பின்னர் வரிசையாக அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பினார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சஞ்சு சாம்சனின் முதல் 3 போட்டிகளில் அவரின் சராசரி 60.9 ஆக உள்ளது. ஆனால் 3வது போட்டிக்கு பின்னர் சராசரி 22.4 மட்டுமே உள்ளது.
இந்தாண்டும் சொதப்பல்
இந்நிலையில் இந்த சீசனிலும் சஞ்சு சாம்சன் அதே சொதப்பலை தான் செய்து வருகிறார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் 119 ரன்கள் எடுத்தார். ஆனால் அதன்பின் அடுத்தடுத்து 3 போட்டிகளில் பெரிய அளவில் ரன் எடுக்காமல் சொதப்பி உள்ளார். நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் 21 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
கவாஸ்கர் அட்வைஸ்
இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் கவாஸ்கர், சஞ்சு சாம்சன் முதலில் சரியான முறையில் ஆட வேண்டும். முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அதன் பின்னர் நிலையான ஆட்டம் இல்லாததே பிரச்னையாக பார்க்கப்படுகிறது. ஒரு போட்டியில் நன்றாக ஆடுகிறார், ஆனால் அதே ஆட்ட முறையை அடுத்தடுத்த போட்டிகளிலும் செயல்படுத்த முயன்று சுலபமாக அவுட்டாகிறார். இதுதான் இவர் இந்திய அணியில் தேர்வாவதில் பெரிய பிரச்னையாக உள்ளது.
இர்ஃபான் பதான்
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், சஞ்சு சாம்சனிடம் நிறைய திறமைகள் உள்ளது. ஆனால் அவரிடம் ஆட்டத்திற்கான அர்பணிப்பு இல்லை. ஒவ்வொரு பந்தும் முக்கியம் என்ற எண்ணம் அவரிடம் இல்லை என தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க ராஜஸ்தான் அணியும் விரக்தியில் உள்ளது. பொறுப்புடன் ஆட வேண்டிய கேப்டனே சொதப்புவதால் போட்டிகளை கோட்டை விடுகிறது.