பிரமாண்ட தொடக்கம்
ஆர்சிபி அணியின் தொடக்கம் மிக பிரமாண்டமாக இருந்தது. தொடக்க வீரர் தேவ்தத் பட்டிக்கல் மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் பவுண்டரிகளை விளாசி தள்ளினர். இதனால் 5 ஓவர்களில் 50 ரன்களை அந்த அணி எட்டியது. சிறப்பாக விளையாடி வந்த பட்டிக்கல் 21 ரன்களுக்கு அவுட்டானார். எனினும் அந்த அணியின் பின் வரிசையில் நல்ல ஃபார்மில் இருக்கும் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆகியோர் இருந்ததால் 170+ ஸ்கோர் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நரேன் முட்டுக்கட்டை
ஆனால் அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டார் கொல்கத்தா அணியின் சுனில் நரேன். அவர் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் ஆர்சிபியின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிட்டது. கடந்த போட்டியில் ஆர்சிபி வெற்றிக்கு காரணமாக இருந்தவர் ஸ்ரீகர் பரத். ஆனால் இன்றைய போட்டியில் நரேன் வீசிய 10வது ஓவரில் ஸ்ரீகர் பரத் தூக்கி அடிக்க முயன்று கேட்ச் அவுட்டானார்.
விராட் கோலி ஏமாற்றம்
விராட் கோலி பவுண்டரிகளை விளாசி அச்சுறுத்தல் கொடுத்து வந்தார். இதனால் மீண்டும் 10வது ஓவரில் பந்துவீச வந்த நரேன், கோலியை போல்ட் எடுத்து அவுட்டாக்கினார். விராட் கோலி (39) சற்று சிரமமான ஷாட்டை ஆட முயன்ற போது போல்ட்டில் பந்து பட்டது.
அச்சுறுத்தல் தரும் ஜோடி
கோலி விக்கெட் போனாலும், மிடில் ஆர்டரில் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடியவர்கள் மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ். ஆனால் அடுத்தடுத்து ஓவர்களில் இருவரின் விக்கெட்டையும் எடுத்து அசத்தினார் சுனில் நரேன். விராட் கோலியை போன்றே டிவில்லியர்ஸும் (11) போல்ட் ஆனார். இதே போல தூக்கி அடிக்க முயன்ற அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லும் சுனில் நரேனின் கையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
கேம் சேஞ்சர்
மொத்தமாக 4 ஓவர்களை வீசிய சுனில் நரேன், 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். இவர் கைப்பற்றிய 4 விக்கெட்கள் தான் கொல்கத்தா அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. கொல்கத்தா வெற்றி பெற்றால் சுனில் நரேன் ஆட்ட நாயகன் விருதை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.