ரெய்னா - தோனி நட்பு
இந்திய கிரிக்கெட் அணியில் சுரேஷ் ரெய்னா தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரின் மனதையும் வென்றார். இந்திய அணியின் டாப் ஆர்டர் சொதப்பிய போதெல்லாம் தோனி - சுரேஷ் ரெய்னா ஜோடி தான் பல முறை காப்பாற்றியுள்ளது. இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் தோனியின் மனநிலையை புரிந்துக்கொண்டு அவருக்கு ஏற்றவாறு சரியான பார்ட்னர்ஷிப் கொடுக்க கூடியவர் ரெய்னாவே ஆகும்.
மெகா ஏலம்
இப்படிபட்ட இவர்களின் நெருங்கிய நட்பு குறித்து தெரியாதவர்களே இருக்க முடியாது. தோனி கடந்தாண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த உடனேயே சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்துவிட்டார். இருவரும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரையும் அடுத்தாண்டு நடக்கவுள்ள மெகா ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது.
விளையாட மாட்டேன்
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தோனி அடுத்தாண்டு ஓய்வு பெறுவதாக தகவல்கள் பரவி வருகிறது. ஒருவேளை தோனி அடுத்தாண்டு ஐபிஎல்-ல் விளையாடவில்லை என்றால், நானும் விளையாட மாட்டேன். நாங்கள் 2008ம் ஆண்டு முதல் ஒன்றாக செயல்பட்டு வருகிறோம். இந்தாண்டு கோப்பையை வென்றுவிட்டால், தோனியை அடுத்தாண்டு விளையாட நான் சம்மதிக்க வைப்பேன்.
2 புதிய அணிகள்
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் 2 புதிய அணிகள் வரவுள்ளன. ஆனால் அதில் எந்த அணிக்குமே நான் செல்ல விரும்பவில்லை. தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக மட்டுமே விளையாட விரும்புகிறேன். இந்தாண்டு தொடரில் நானும், தோனியும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவோம். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை பொறுமையாக பார்ப்போம் எனக்கூறியுள்ளார்.