ஐபிஎல்-ல் தமிழக வீரர்கள்
ஐபிஎல் தொடரின் மூலம் தமிழக வீரர்களும் இந்திய அணிக்கு எந்த வித தடையும் இன்றி தகுதிப் பெறலாம் என்பதை நிரூபித்தவர் சேலம் சின்னப்பம்பட்டி டி.நடராஜன். இவருக்கு யார்க்கர் நடராஜன் என்ற அடைமொழியிலும் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இவருக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பளித்து ஜொலிக்க வைத்திருந்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி. நடராஜன் நெட் பவுலராக அணிக்குள் சென்று பின்னர் தனக்கான இடத்தை இந்திய அணியிலும் பெற்றார்.
மீண்டும் தமிழக வீரர்
இந்நிலையில் டி.நடராஜனை போன்று மற்றொரு தமிழக வீரரையும் ஜொலிக்க வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளது சன் ரைசரஸ் ஐதராபாத் அணி. இந்த முறை அந்த வாய்ப்பை பெற்றிருப்பவர் தமிழகத்தின் ஜி. பெரியசாமி எனும் இளம் வீரர் தான். இவரை வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
மலிங்கா ரசிகன்
27 வயதாகும் கணேசன் பெரியசாமி, வலதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆவார். இவரும் நடராஜனை போன்றே யார்க்கருக்கு புகழ்பெற்றவர் ஆவார். இவரின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இவரின் பவுலிங் ஸ்டைல் மலிங்காவை போன்றே அச்சு அசலாக அப்படியே இருக்கும். டிஎன்பிஎல் தொடரில் முதல் சேப்பாக் கில்லீஸ் அணிக்காக விளையாடி வந்த பெரியசாமி பல்வேறு ஆட்ட நாயகன் விருதுகளையும் பெற்றார். கடந்த 2019ம் ஆண்டு தொடர் நாயகன் விருதும் அவருக்கு சென்றது.
ஐபிஎல் ஏலம்
இந்தாண்டு டிஎன்பிஎல் தொடரில் இவர் சேலம் ஸ்பார்டான்ஸ் அணிக்காக பந்துவீசினார். இதிலும் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாகவே ஐதராபாத் அணியின் கண்ணில் பட்டுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது ரூ.20 லட்சம் என்ற அடிப்படை தொகைக்கு இவர் ஏலம் விடப்பட்டார். ஆனால் எந்த அணியும் கண்டுக்கொள்ளவில்லை. தற்போது ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.