ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல்
கொரோனா தாக்கம் காரணமாக ஐபிஎல் 2021 தொடர் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 29 போட்டிகளை வெற்றிகரமாக முடித்துள்ள ஐபிஎல் நிர்வாகம் தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதற்கு காரணம் அடுத்தடுத்த வீரர்களுக்கு கொரோனா பரவியதுதான்.
மீண்டும் எப்போது?
இந்நிலையில் அடுத்து ஐபிஎல் 2021 தொடர் எப்போது எங்கே நடக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் ரசிகர்களுக்கு சிறப்பான கொண்டாட்டத்தை ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடத்த முடிவு
ஆயினும் இந்த தொடர் தொடர்ந்து நடத்தப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து காணப்படுகிறது. இதன் தாக்கம் மட்டுப்படும் சூழலில் மீண்டும் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
ஐபிஎல்லை நடத்த ஆர்வம்
அப்படி இல்லையென்றால் யூஏஇயில் நடத்தவும் திட்டம் உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் மாகாண கிரிக்கெட் போர்ட்கள் ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் நடத்தி முடிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளன.
சிறப்பாக நடந்திருக்கும்
கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகமாக இல்லாத நிலையிலும் பிசிசிஐ சிறப்பான திட்டமிட்டு யூஏஇயில் போட்டிகளை நடத்தி முடித்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் அத்தகைய முடிவை எடுத்திருந்தால் தற்போது ஐபிஎல் போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்திருக்கும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் முடிவாக உள்ளது.