கொரோனா அச்சம்
கொரோனா அச்சம் காரணமாக தமிழக வீரர் அஸ்வின் நேற்று ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். இவரை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆன்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டனர். இதனால் அணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முக்கிய வீரர்கள்
இந்த அதிர்ச்சியே இன்னும் அணிகளிடம் இருந்து நீங்காத நிலையில் தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். அதே போல ஸ்டீவ் ஸ்மித் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.
காரணம் என்ன?
கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு வருகிறது. எனவே சொந்த நாட்டிற்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகுமோ என்ற அச்சத்தில் இருவரும் வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
விமானம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தனர். இதில் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகிய 3 பேர் வெளியேறிய சூழலில் தற்போது மேலும் இரண்டு பேர் வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. விமானங்களின் தடையே இதற்கு காரணமாக் இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தனி விமானம் மூலம் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருவதாக கூறப்படுகிறது.