சிஎஸ்கே போட்டி
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹாரின் வேகத்தில் சிக்கி பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல் (5), மயங்க் அகர்வால் (0), தீபக் ஹூடா (10), நிக்கோலஸ் பூரண் (0) என வெளியேறினர். அதிரடி பேட்ஸ்மேன் கெயில் 10 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இலக்கு
பின்னர் வந்த வீரர்களில் ஷாருக்கான் மட்டுமே சிறப்பாக ஆடி 47 ரன்கள் அடித்ததால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர் ருத்ராஜ் கெயிக் வாட் 5 ரன்களுக்கு வெளியேறி மீண்டும் சொதப்பினார். ஆனால் அதன் பின்னர் பொறுப்பாக ஆடிய டூப்ளசிஸ் - மொயின் அலி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
சிறப்பாக ஆடி வந்த மொயின் அலி 46 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இறுதியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
பெரிய குழப்பம்
போட்டியின் இடையே டூப்ளசிஸுக்கு நடந்த சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 14 ஓவரை ரைலே மெரிடித் வீசினார். அவர் வீசிய 5வது பந்து பவுன்சராக சென்று பேட்டிங் செய்த டூப்ளசிஸுன் கிளவுஸில் பட்டு கேட்ச் ஆனது என கள நடுவர் அனில் குமார் சவுத்ரி அவுட் கொடுக்க முடிவெடுத்தார். ஆனால் அந்த ஓவரில் ஏற்கனவே ஒரு ஷார்ட் பால் போடப்பட்டதால் டூப்ளசிஸுக்கு வீசிய பந்து ஷார்ட் பாலா என சோதிக்க 3வது நடுவருக்கு பரிந்துரைத்தார். ஒரு ஓவரில் 2 ஷார்ட் வீசினால் நோ பால் ஆகும். ஆனால் 3வது நடுவர் பந்து கையில் பட்டதா இல்லையா என்று கூட பார்க்காமல் அது பவுன்சர் பந்து இல்லை தோள்பட்டைக்கு கீழ்தான் சென்றது என அவுட் கொடுக்க கூறினார்.
டூப்ளசிஸ் ஏற்படுத்திய வேடிக்கை
இதனை சரியாக கவனிக்காத கள நடுவர் நாட் அவுட் கொடுத்தார். பின்னர் மீண்டும் 3வது நடுவர் அவுட் கொடுக்க சொல்ல டூப்ளசிஸுக்கு அவுட் கொடுத்தார். ஆனால் களத்தில் இருந்து வெளியேற மறுத்த டூப்ளசிஸ் தனது கையில் பந்து படவே இல்லை எனக்கூறி டிஆர்எஸ் முறையில் ரிவ்வியூவ் செய்தார். 3வது நடுவரின் அல்ட்ரா எட்ஜ் பரிசோதனையில் அது அவுட் இல்லை என தெரியவந்தது. இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் குழப்பம் நீடித்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய டூப்ளசிஸ் 36 ரன்கள் எடுத்தார்.