பிரச்னை தொடங்கியது
கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தனது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பயோ பபுளை விட்டு வெளியேறி மருத்துவமனைக்கு சென்றுஸ்கேன் செய்துள்ளார். பின்னர் எந்தவித குவாரண்டைனிலும் இல்லாமல் அணியின் பபுளுக்குள் நுழைந்துள்ளார். இங்கு தான் பிரச்னையே ஆரம்பித்துள்ளது.
நோய் பரவல்
மே.1ம் தேதி மருத்துவமனையில் இருந்து திரும்பிய வருண் சக்கரவர்த்தி, தனது சக வீரர் சந்தீப் வாரியருடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவர்கள் மிக அருகில் அமர்ந்துக்கொண்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டு உணவருந்தியுள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து ஒன்றாக பயிற்சி ஆட்டத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் வருண் அப்போது உடல்நிலை சரியில்லை எனக்கூறிவிட்டு அறைக்கு சென்றுவிட்டார். பின்னர் சந்தீப் மட்டும் கொல்கத்தா அணியுடன் பயிற்சிக்கு சென்றுள்ளார்.
அமித் மிஸ்ரா
அன்றைய தினம் கொல்கத்தா - டெல்லி என இரு அணிகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. வருணுடன் தொடர்பில் இருந்திருந்த சந்தீப் வாரியர் நேராக டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ராவிடம் சென்று நீண்ட நேரம் பேசி சிரித்துள்ளார். பின்னர் இருவரும் அவர் அவர் அணிகளுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வீரர்கள் தனிமை
இந்த பயிற்சிக்கு பின்னர் ஹோட்டல் அறைக்கு சென்ற அமித் மிஸ்ரா தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். மற்ற வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். அதே போல கொல்கத்தா அணியில் சந்தீப் வாரியரும் தனிமைப்படுத்தப்பட்டார். இன்னும் எத்தனை வீரர்கள் இவர்களை போன்று பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.