சிஎஸ்கே vs டெல்லி
சென்னை மற்றும் டெல்லி என 2 அணிகளும் 12 போட்டிகளில் விளையாடி, 9இல் வெற்றி மற்றும் 3இல் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும், நெட் ரன்ரேட் 0.829 உடன் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி 2ஆம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டி புள்ளி பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் கூட இதில் வெல்லும் அணி முதல் 2 இடங்களில் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதை உறுதி செய்யும். மேலும், இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியிருந்தது. எனவே, அந்த தோல்விக்குப் பழிவாங்கும் நோக்கில் சென்னை அணி களமிறங்கும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.
டெல்லி கேபிடல்ஸ்
அதேநேரம் கடந்த 2019 முதல் டெல்லி அணி சென்னை அணியை 6 முறை எதிர்கொண்டுள்ளது. அதில் 2இல் மட்டுமே டெல்லி அணி வென்றுள்ளது. அனுபவம் வாய்ந்த சென்னை அணியை எதிர்கொள்வதில் டெல்லி அணி தொடர்ந்து திணறி வருகிறது. அதேநேரம் இந்த சீசனில் நல்ல செட் ஆன அணிகளில் ஒன்றாக டெல்லி அணி உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ள நிலையில், முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்து புதிய காம்பினேஷன்களை முயன்று பார்க்க அந்த அணி முயலலாம். அமித் மிஸ்ரா மற்றும் யுமேஷ் யாதவ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். சிஎஸ்கே பேட்டிங் லைன்அப்பை உடைக்கும் வகையிலான வியூகங்களுடன் டெல்லி அணி கண்டிப்பாகக் களமிறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சென்னை
மறுபுறம் சென்னை அணியைப் பொறுத்தவரை இந்த சீசன் முழுக்க தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மூத்த அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட சென்னை அணி டெல்லியை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது தான் இன்றைய பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும். இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் ருதுராஜ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அவர் அடித்த சதம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பேட்டிங் வலுவாக உள்ள போதிலும், சிஎஸ்கே அணியின் பவுலிங் இதுவரை பக்காவாக செட் ஆகவில்லை. பிளே ஆப் சுற்று உறுதியாகியுள்ள நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் புதிய பவுலிங் லைன்அப்பை முயற்சி செய்யுமா அல்லது பழைய வீரர்களுடனேயே தொடருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
9 கோடி ஆல்ரவுண்டர்
அதேபோல இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் ஆல் ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதமுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் பஞ்சாப் அணிக்காக விளையாடியவர் கிருஷ்ணப்பா கவுதம். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், பேட்டிங்கிலும் கணிசமான பங்களிப்பைத் தொடர்ந்து அளித்து வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெற்ற மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி இவரை 9 கோடி ரூபாய்க்கு வாங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இருப்பினும், இந்தியாவில் நடைபெற்ற முதல்கட்ட போட்டிகளில் ஒன்றில் கூட கிருஷ்ணப்பா கவுதமுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
வாய்ப்பு இல்லை
அதேநேரம் கொரோனாவால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்ட பிறகு மீண்டும் ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கிய போது, கிருஷ்ணப்பா கவுதம் சிஎஸ்கே அணியில் முக்கிய வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 32 வயதான கிருஷ்ணப்பா கவுதமின் பவுலிங் திறன் சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய பங்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர் முதலிலேயே அவர் பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்டார். இதனால் ஏலத்தில் 9 கோடி கொடுத்து எடுத்த வீரரின் பர்ஃபாமன்ஸை இதுவரை பார்க்க முடியவில்லை.
இன்றைய போட்டி
இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு பேட்டிங் செட் ஆன அளவுக்கு பவுலிங் செட் ஆகவில்லை. கடந்த போட்டியில் இது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. சிஎஸ்கே போராடி எடுத்த 189 ரன்களை, ராஜஸ்தான் வீரர்கள் அசால்டாக 18 ஓவர்களில் எடுத்தனர். சாம் கரன் தொடங்கி மொயின் அலி வரை அனைத்து பவுலர்களையும் ராஜஸ்தான் துவைத்து எடுத்துவிட்டது. இதன் காரணமாக இந்த போட்டியில் புதிய முயற்சியாக கிருஷ்ணப்பா கவுதமுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஎம் ஆசிஃப்க்கு பதிலாக இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். ஆனால் தல தோனி பொதுவாக பிளேயிங் 11ஐ அடிக்கடி மாற்றமாட்டார் என்பதாலும் பிளே ஆப் சுற்றுக்கு அருகில் இருப்பதாலும், கிருஷ்ணப்பா கவுதமுக்கு இந்த சீசனில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றும் கூறப்படுகிறது.