கோலி பதவி விலகல்
ஆர்சிபியின் இந்த நிலைமைக்கு கேப்டன் விராட் கோலி நேரடி காரணமாக உள்ளார். சமீபத்தில் டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன், இந்திய டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து விலகவுள்ளேன் என விராட் கோலி அதிரடியாக அறிவித்தார். இதுவே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சூழலில் ஐபிஎல் 14ஆவது சீசன் முடிந்தவுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கேப்டன் பதவியிலிருந்தும் விலகவுள்ளேன் என அறிவித்தது மேலும் ஒரு இடியை இறக்கியது.
என்ன காரணம்?
பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், சிறிது காலம் பேட்டிங்கில் கவனம் செலுத்தப்போவதாகவும் கூறி விராட் கோலி இந்த முடிவினை எடுத்துள்ளார். தற்போதைய நிலைமையை வைத்து பார்த்தால் இந்த தொடரில் பாதியிலேயே கோலி நீக்கப்படுவார் எனத்தெரிகிறது. இந்திய டி20 அணியை பொறுத்தவரை அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மாதான் செயல்படுவார் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், ஆர்சிபிக்கு? இன்னும் சரியான தெளிவு எட்டப்படவில்லை.
அடுத்த கேப்டன் யார்
ஆர்சிபி அணியில் விராட் கோலிக்கு பின்னர் சீனியர் வீரராக ஏ.பி.டிவில்லியர்ஸ் தான் அணியில் உள்ளார். ஆனால், டிவில்லியர்ஸுக்கு தற்போதே 37 வயது ஆகிவிட்டதால் அதிகபட்சமாக இன்னும் 2 ஆண்டு காலம் அவர் ஆர்சிபியில் விளையாடலாம். எனவே அவரின் வயதை கருத்தில் கொண்டு வேறு கேப்டனை தான் ஆர்சிபி தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பொல்லார்ட்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட தீவிர ஆலோசனையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயிரன் பொல்லார்டை கேப்டனாக நியமிக்க முதற்கட்ட முடிவு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கெயிரன் பொல்லார்ட் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ரோகித் இல்லாத சமயங்களில் பொல்லார்ட் பல போட்டிகளில் சிறப்பாக கேப்டன்சி செய்துள்ளார். இவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் கேப்டனாக இருக்கிறார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரிலும் அணியை சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார்.
அதிகத் தொகை ஏலம்
இந்த அனுபவம் காரணமாக இவரை கேப்டனாக நியமிக்கத்தான் ஆர்சிபி நிர்வாகம் விரும்பும். அடுத்தாண்டு மெகா ஏலம் நடத்தப்படவுள்ளதால் பொல்லார்டை அதிக தொகை கொடுத்து எடுத்துவிட ஆர்சிபி திட்டமிடும் எனக்கூறப்படுகிறது. இவரைத் தவிர்த்து சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் போன்றவர்களையும் கேப்டனாக நியமிக்க ஆர்சிபி தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.