மெகா ஏலம்
ஐபிஎல் தொடரில் மேலும் 2 புதிய அணிகளை சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த 2 அணிகளையும் எந்த நிறுவனம் வாங்கப்போகிறது, எந்த நகரத்தை மையமாக கொண்டு 2 புதிய அணிகள் உருவாக்கப்படவுள்ளது என்ற தகவல்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
ஏலம் நடைபெறும் தேதி
இந்நிலையில் 2 அணிகளை வாங்குவதற்கான ஏலத்தின் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதாவது இரு அணிகளையும் வாங்குவதற்கான ஏலம் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கவுள்ளது. அதாவது இந்தாண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த அடுத்த 2 நாட்களில் இந்த ஏலம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளன. ஏலத்தினை பற்றியும், அணி விவரங்கள் குறித்த சந்தேகங்களையும், விசாரணைகளையும் வரும் செப்டம்பர் 21ம் தேதிக்குள் கேட்டுத்தெரிந்துக்கொள்ளலாம் எனத்தெரிவித்துள்ளது.
நுழைவுச்சீட்டு
இந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள விரும்புவோர் முதலில் ஐடிடி ( Invitation to tender) எனப்படும் நுழைவுச்சீட்டை வரும் அக்டோபர் 5ம் தேதிக்குள் ( கடைசி நாள்) வாங்கவேண்டும். இதனை வாங்குவதற்கு ரூ.10,00,000 பணம் செலுத்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் இந்த தொகை திருப்பி தரப்பட மாட்டாது என பிசிசிஐ கூறியுள்ளது. இதனை வாங்குவதற்கும் சில தகுதிகள் கோரப்படுகின்றன.
நிபந்தனைகள் என்ன?
அதாவது ஆண்டுக்கு ரூ.3000 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே ஐபிஎல் அணியை வாங்க தகுதியானவை. அவர்கள் மட்டுமே நுழைவுச்சீட்டை பெற முடியும். மேலும் புதிய ஐபிஎல் அணிகளை வாங்குவதற்கு ஏலத்தின் ஆரம்பத் தொகையாக ரூ.2000 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 2 அணிகளை ஏலம் விடுவதில் இருந்து ரூ.5000 கோடி வரை வருமானம் ஈட்ட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் ஏலமானது இந்தியாவில் நடைபெற போவதில்லை. அமீரகம் அல்லது மஸ்கட்டில் நடத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
கடும் போட்டி
புதிதாக உருவாக்கப்படும் அணிகள், அகமதாபாத், லக்னோ அல்லது புனேவை மையமாக கொண்டு உருவாக்கப்படலாம். ஏனென்றால், அகமாதாபாத்தில் நரேந்திர மோடி மைதானம் மற்றும் லக்னோவில் எக்னா மைதானம் என வசதிகள் உள்ளன. எனவே இந்த அணிகளை வாங்குவதற்கு அதானி குழுமமும், ஆர்பிஎஜி குழுமமும் போட்டி போட அதிக வாய்ப்புகள் உள்ளது.