தென்னாப்பிரிக்க சீரிஸ்
இந்தியாவுக்கு வரும் தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 9ம் தேதி தொடங்கி ஜூன் 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அணியை ஐபிஎல் தொடரை வைத்து தான் தேர்வு செய்வோம் என ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டிருந்தது.
வீரர்களுக்கு ஓய்வு
இந்நிலையில் இன்று ரோகித் சர்மாவுடன் ஆலோசனை நடத்தி அணித்தேர்வை பிசிசிஐ முடித்துள்ளது. இதில் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட பலருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஜூலையில் நடைபெறும் இங்கிலாந்து தொடருக்கு தயாராக வேண்டும் என்பதால், இவர்களுக்கு ஒருமாதம் ஓய்வு தரப்பட்டுள்ளது.
ரிஸ்க் எடுத்த பிசிசிஐ
அணியின் தூண்களான இவர்களே இல்லாததால், அதிகளவில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படவுள்ளது. தென்னாப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரேவிஸ், குயிண்டன் டிக்காக், டேவிட் மில்லர், ரபாடா போன்ற வீரர்களை எதிர்க்க அனுபவம் இல்லாத வீரர்களை தேர்வு செய்து பிசிசிஐ ரிஸ்க் எடுத்துள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுடன் கடந்த தொடரில் அடிவாங்கிய இந்திய அணி, இந்த தொடரில் பதிலடி கொடுக்க காத்துள்ளது.
கேப்டன் யார்?
ரோகித் சர்மா இல்லாத நேரங்களில் கே.எல்.ராகுல் தான் கேப்டன்சி செய்து வந்தார். ஆனால் தற்போது அவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதால் அடுத்ததாக ஹர்திக் பாண்ட்யா அல்லது ஷிகர் தவான் இருவரில் யாரேனும் ஒருவருக்கு கேப்டன்சி வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.